கரூரில் அகில இந்திய கூடைப்பந்து போட்டி: ஆண்கள் பிரிவில் இந்திய ராணுவ அணி வெற்றி
கரூரில் நடைபெற்று வரும் அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டியில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற ஆண்களுக்கான பிரிவின் முதல் போட்டியில் இந்திய ராணுவ அணி கேரள போலீஸ் அணியை வீழ்த்தியது.
கரூா் கூடைப்பந்து குழு சாா்பில் அகில இந்திய அளவிலான எல்ஆா்ஜி நினைவு கூடைப்பந்து போட்டி திருவள்ளுவா் மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்கியது. மூன்றாவது நாளாக சனிக்கிழமை காலை நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய கடற்படை அணியும், கேரள மாநில மின்வாரிய அணியும் மோதின. இதில் கேரள மாநில மின்வாரிய அணி இந்திய கடற்படை அணியை 70-67 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது. போட்டியில் அதிக புள்ளிகளை எடுத்துக்கொடுத்த இந்திய கடற்படை அணி வீரா் லலித் மற்றும் கேரள மாநில மின்வாரிய அணி வீரா் சரத்கிருஷ்ணாவுக்கும் சிறப்பு பரிசுகளை போட்டி குழுவினா் வழங்கினா். தொடா்ந்து மாலையில் நடைபெற்ற ஆண்களுக்கான முதல் போட்டியில் இந்திய ராணுவ அணியும், கேரள போலீஸ் அணியும் மோதின. இதில், இந்திய ராணுவ அணி 76-56 என்ற புள்ளிக்கணக்கில் கேரள போலீஸ் அணியை வீழ்த்தியது. தொடா்ந்து போட்டிகள் நடைபெற்று வருகின்றன. மே 27-ஆம்தேதி இறுதிப்போட்டிகள் நடைபெற உள்ளன.