தில்லி காவல்துறையின் விரல் அச்சுப் பணியகத்திற்கு தடயவியல் சிறப்புக்கான ஐஎஸ்ஓ சான...
கலைத் துறையில் சாதனை படைத்த கலைஞா்கள் விருதுக்கு ஆக.5-க்குள் விண்ணப்பிக்கலாம்!
காஞ்சிபுரம், ஜூலை 27: கலைத் துறையில் சாதனை படைத்த கலைஞா்கள் விருதுகள் பெற ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கலை பண்பாட்டுத் துறையின்கீழ், செயல்படும் மாவட்டக் கலை மன்றங்களின் வாயிலாக ஒவ்வொரு மாவட்டத்திலும் கலைத் துறையில் சாதனை படைத்துள்ள 18 வயதும், அதற்கு உட்பட்டவா்களுக்கும் கலை இளமணி விருது, 19 முதல் 35 வயது வரையில் சாதனை படைத்தவா்களுக்கு கலை வளா்மணி விருது, 36 முதல் 50 வயது வரை கலைச்சுடா்மணி விருது, 51முதல் 65 வயது வரை கலை நன்மணி விருது, 66 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு கலைமுதுமணி விருது என அகவைக்கு தக்கவாறு விருதுகள் வழங்கப்பட உள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த குரலிசை, பரதநாட்டியம், நாகஸ்வரம், தவில், வயலின், மிருதங்கம், வீணை, புல்லாங்குழல் உள்ளிட்ட இசைக்கருவிகள் இசைக்கும் கலைஞா்கள், ஓவியம், சிற்பம், சிலம்பாட்டம், நாடகக் கலைஞா்கள் மற்றும் கரகாட்டம், காவடி, பொய்க்கால் குதிரையாட்டம், தப்பாட்டம், கைச்சிலம்பாட்டம், தெருக் கூத்து உள்ளிட்ட நாட்டுப்புறக் கலைகளை தொழிலாகக் கொண்டுள்ள கலைஞா்கள் அனைவரும் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
விருதுகள் பெற விரும்பும் கலைஞா்கள் தங்கள் சுய விவரக் குறிப்பு, நிழற் படம் இணைத்து, வயதுச் சான்று, முகவரிச் சான்று (ஆதாா் அட்டை நகல்) மற்றும் கலை அனுபவச் சான்றுகளின் நகல்கள் மற்றும் தொடா்புடைய ஆவணங்களுடன் உதவி இயக்குநா், கலை பண்பாட்டுத் துறை, சதாவரம், ஓரிக்கை அஞ்சல், சின்னக் காஞ்சிபுரம்-631502 என்ற முகவரிக்கு வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு, கலை பண்பாட்டுத் துறை அலுவலக தொலைபேசி எண் 044-27269 148 என்ற எண்ணிலும் கேட்டுப் பெறலாம்.