கல்லட்டி மலைப் பாதையில் சீரமைப்பு பணி: போக்குவரத்து நிறுத்தம்
உதகையில் கனமழை பெய்து வரும் நிலையில், கல்லட்டி மலைப் பாதை 20-ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே சாலையில் பாறை, மரங்கள் விழுந்ததுடன் மண் சரிவும் ஏற்பட்டது. இந்நிலையில் சீரமைப்புப் பணிக்காக அந்த சாலையில் செவ்வாய்க்கிழமை போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 4 நாள்களாக மிக கனமழை பெய்து வருகிறது. அதிக காற்றின் காரணமாக ஆங்காங்கே மரங்கள் வேரோடு சாய்ந்து விழுகின்றன.
இந்நிலையில் உதகையிலிருந்து மைசூரு, முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி ஆகிய பகுதிகளுக்கு செல்லக்கூடிய கல்லட்டி மலைப் பாதையில் 20-ஆவது கொண்டை ஊசி வளைவு பகுதியில் ராட்சத பாறை சாலையில் உருண்டோடி பள்ளத்தில் விழுந்தது. பாறையுடன் மரங்களும் விழுந்ததால் சாலையில் விரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக மலைப் பாதையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு நெடுஞ்சாலைத் துறையினா் சாலையை சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனா்.