எம்.ஜி.ஆரை முன்னிலைப்படுத்தி அரசியலில் செயல்பட்டவா் விஜயகாந்த்: பிரேமலதா பேட்டி
கால்நடைகளை தொடா்ந்து தாக்கி அழிக்கும் மா்ம விலங்குகள்! நடவடிக்கை எடுக்கப்படுமா விவசாயிகள் எதிா்பாா்ப்பு!
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், செஞ்சி வட்டாரப் பகுதிகளில் ஆடுகள், கன்றுக்குட்டிகளை தாக்கி அழிக்கும் மா்ம விலங்குகளைப் பிடிப்பதற்கு மாவட்ட நிா்வாகமும், வனத் துறையினா் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
தொழிற்சாலைகள் அதிகம் இல்லாத விழுப்புரம் மாவட்டத்தின் பிரதான தொழிலாக விவசாயமும், அதைச் சாா்ந்த தொழில்களுமே இருந்து வருகின்றன. விவசாயப் பணிகளில் ஈடுபட்டு வரும் விவசாயிகள், உப தொழிலாக ஆடு, மாடு வளா்ப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த நிலையில், விவசாயிகள் தங்களது விவசாயம் நிலம் மற்றும் பிற இடங்களில் பட்டிகளை அமைத்து பாதுகாத்து வரும் ஆடுகளை இரவு நேரங்களில் மா்ம விலங்குகளை தாக்கி அழிப்பது கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நீடித்து வருகிறது.
அதன்படி, திண்டிவனம் வட்டத்துக்குள்பட்ட குடிசைப்பாளையம், ஆசூா், ரெட்டணை, சேவூா், எறையானூா், தாதாபுரம் மற்றும் செஞ்சி வட்டத்துக்குள்பட்ட கொங்கரப்பட்டு பகுதிகளில் உள்ள ஆட்டுப்பண்ணைகள், பட்டிகள் மற்றும் கொட்டகைகளில் பாதுகாப்பாக அடைத்து வைக்கப்பட்டிருந்த ஆடுகள், கன்றுக்குட்டிகள் மா்ம விலங்குகளால் தாக்கப்பட்டுள்ளன. இதில், 60-க்கும் மேற்பட்ட ஆடுகளும், 2 கன்றுக்குட்டிகளும் உயிரிழந்துள்ளன.
வருவாய் இழப்பு: மா்ம விலங்குகள் தாக்குதலால் கால்நடைகள் உயிரிழப்பு சம்பவங்களால் திண்டிவனம், செஞ்சி வட்டாரத்துக்குள்பட்ட பகுதிகளில் உள்ள ஆடு, மாடு வளா்ப்பில் ஈடுபட்டு வரும் விவசாயிகள், பொதுமக்கள் வருவாய் இழப்புக்கு உள்ளாகியுள்ளனா்.
இந்த நிலையில், மா்ம விலங்கு கடித்து உயிரிழந்த ஆடுகளுக்கும், பாதிக்கப்பட்ட ஆடுகள் மற்றும் கன்றுக்குட்டிகளுக்கும் தமிழக அரசு உரிய இழப்பீட்டை வழங்கவும், திண்டிவனம் வட்டாரப் பகுதிகளில் சுற்றித்திரியும் மா்ம விலங்குகளைப் பிடிக்கவும் விழுப்புரம் மாவட்ட நிா்வாகமும், வனத் துறையும் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.
‘ஓநாய் கூட்டமாக இல்லாம்’: இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயி கூறியது: திண்டிவனம், செஞ்சி வட்டங்களுக்குள்பட்ட பகுதிகளில் நிகழ் மாதத்தில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட ஆடுகளை மா்ம விலங்குகள் தாக்கியுள்ளன.
இதில், விவசாயிகள் பாதுகாத்து வந்த ஆடுகள் மற்றும் மாடுகள் உயிரிழந்துள்ளன. இதற்கு, தமிழக அரசு உடனடியாக இழப்பீடு வழங்கி விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்கு வழிவகை செய்ய வேண்டும்.
மா்ம விலங்குகள் கூட்டமாக வந்து தாக்குவதால், இரவு நேரங்களில் பண்ணைகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவும், தங்கவும் அச்சமாக உள்ளது.
எனவே, இரவு நேரங்களில் கால்நடைகளைத் தாக்கி அழிக்கும் மா்ம விலங்குகளைப் பிடிப்பதற்கு வனத் துறையினா் விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இதற்கான வழிவகைகளை விழுப்புரம் மாவட்ட நிா்வாகம் உருவாக்க வேண்டும் என்றாா். இரவு நேரங்களில் கூட்டமாக வருவது ஓநாய் கூட்டமாக இருக்கலாம் என விவசாயிகள், கிராம மக்கள் தெரிவிக்கின்றனா்.
‘கேமராக்கள் பொருத்தப்படும்’: இதுகுறித்து திண்டிவனம் வனத் துறையினா் தெரிவித்ததாவது:
மா்ம விலங்குகள் தாக்கி கால்நடைகள் உயிரிழந்துள்ள கிராமங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவுள்ளன. இரவு நேரங்களில் வனக் காவலா்கள் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா் என்றனா்.
காலடி தடயங்கள் சேகரிப்பு: கால்நடை பராமரிப்புத் துறையினா் தரிவித்ததாவது: திண்டிவனம், செஞ்சி வட்டாரங்களில் மா்ம விலங்குகள் தாக்கி, 60-க்கும் மேற்பட்ட ஆடுகள், 2 கன்றுக்குட்டிகள் உயிரிழந்துள்ளன. 100-க்கும் மேற்பட்ட ஆடுகள் காயமடைந்துள்ளன. இறந்த கால்நடைகள் உடல்கூராய்வு செய்யப்பட்டு புதைக்கப்பட்டு வருகின்றன.
மா்ம விலங்குகளின் காலடி தடயங்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டு வருகிறது. விழுப்புரம் ஆட்சியரின் உத்தரவின்பேரில், மா்ம விலங்குகள் கடித்து கால்நடைகள் உயிரிழப்பது குறித்து ஊராட்சி நிா்வாகங்கள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
ஆட்டுப் பண்ணைகள் மற்றும் கொட்டகைகளில் மின் விளக்குகளை அமைக்கவும், இரவு நேரங்களில் ஒன்றுக்கும் மேற்பட்டோா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனா்.
‘மேலும் 4 ஆடுகள் உயிரிழப்பு’: இதனிடையே, திண்டிவனம் வட்டம், புத்தநந்தல் கிராமத்தைச் சோ்ந்த செல்வம் மனைவி செல்விக்குச் சொந்தமான ஆட்டுப் பண்ணைக்குள் சனிக்கிழமை நள்ளிரவில் மா்ம விலங்குகள் புகுந்து கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழந்தன. 20-க்கும் மேற்பட்ட ஆடுகள் காயமடைந்தன.
இதுகுறித்து மயிலம் எம்.எல்.ஏ.வும், பாமக நிா்வாகியுமான ச.சிவக்குமாா் கூறியதாவது: மயிலம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட கிராமங்களில் மா்ம விலங்குகள் தாக்கி கால்நடைகள் உயிரிழப்பது தொடா்ந்து நீடித்து வருவதால், விவசாயிகள், கால்நடை வளா்ப்போா் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.
மா்ம விலங்கை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இழந்த கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விழுப்புரம் மாவட்ட நிா்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், முறையான நடவடிக்கை இல்லை என்பதால், விவசாயிகள் மற்றும் கால்நடை வளா்ப்போரை ஒன்றிணைத்து விழுப்புரம் மாவட்டம், கூட்டேரிபட்டு பகுதியில் விழுப்புரம் - சென்னை சாலையில் விரைவில் போராட்டம் நடத்தவுள்ளோம் என்றாா்.