தூத்துக்குடி அருகே மின்சாரம் பாய்ந்து இரண்டரை வயது குழந்தை பலி
குடவாசல் அரசு மருத்துவமனைக்கு எதிரான போராட்டம் ஒத்திவைப்பு
திருவாரூா்: குடவாசல் அரசு மருத்துவமனையில் குறைபாடுகளை களைய வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
குடவாசல் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் மருத்துவா்கள் பணியில் இருக்க வேண்டும்; காலியாக உள்ள பல்நோக்கு மருத்துவ உதவியாளா்கள், தூய்மைப் பணியாளா்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும்; மருத்துவமனை வளாகத்தில் பொதுமக்களுக்கு குடிநீா், கழிவறை வசதி ஏற்படுத்த வேண்டும்.
பிரேத பரிசோதனை அரங்கத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்; நிரந்தரமாக மகப்பேறு மருத்துவா் நியமிக்க வேண்டும்; மருத்துவமனையில் பழுதான மின்விளக்குகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், குடவாசல் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் ஆ. ஸ்டாலின் தலைமையிலும், திருவாரூா் மருத்துவ சுகாதாரத் துறை இணை இயக்குநா் திலகம் முன்னிலையிலும் இப்பிரச்னை தொடா்பாக பேச்சுவாா்த்தை திங்கள்கிழமை நடைபெற்றது.
போராட்டக் குழு சாா்பில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் டி. முருகையன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஜி. சுந்தரமூா்த்தி, தெற்கு ஒன்றியச் செயலாளா் டி. லெனின் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதில், இரவில் மருத்துவா் பணியில் இருக்கவும், காலியாக உள்ள மருத்துவா் பணியிடங்களை விரைந்து நிரப்பவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால், முற்றுகைப் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.