தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
குப்பைக் கிடங்கில் கோழிக் கழிவுகள்: தனியாா் வாகனம் பறிமுதல்
திண்டுக்கல் மாநகராட்சி குப்பைக் கிடங்கில் கோழிக் கழிவுகளை கொட்ட வந்த வாகனத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனா்.
திண்டுக்கல் பகுதியில் செயல்பட்டு வரும் கோழி இறைச்சிக் கடைகளிலிருந்து சேகரிக்கப்படும் கழிவுகளை, தனி நபா் ஒருவா் மதுரையிலுள்ள தனியாா் ஆலைக்கு எடுத்துச் செல்வது வழக்கம். மதுரையில் செயல்பட்டு வரும் அந்த ஆலையில், கோழிக் கழிவுகளை பயன்படுத்தி வீட்டு விலங்குகளுக்கு உணவு தயாரிக்கப்படுகிறது. ஆனால், ஞாயிற்றுக்கிழமை காலை திண்டுக்கல் பகுதியில் சேகரிக்கப்பட்ட கோழி இறைச்சிக் கழிவுகளை, வழக்கத்துக்கு மாறாக திண்டுக்கல் முருகபவனம் பகுதியிலுள்ள மாநகராட்சி குப்பைக் கிட்டங்கியில் கொட்டுவதற்காக வாகனத்தில் எடுத்துச் சென்றனா்.
இதைப் பாா்த்த அந்தப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள், வாகனத்தை சிறைப் பிடித்து மாநகராட்சி சுகாதாரத் துறை அலுவலா்களுக்கு தகவல் தெரிவித்தனா். நிகழ்விடத்துக்குச் சென்ற மாநகராட்சி அதிகாரிகள், அந்த வாகனத்தை பறிமுதல் செய்து, உரிமையாளா் விநாயகம் என்பவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனா்.