சாம்பியனானது பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்ன்: நடப்பு சீசனில் 5-ஆவது கோப்பை
குரும்பலூா் பேரூராட்சியில் திட்டப் பணிகள் தொடக்கம்
பெரம்பலூா் மாவட்டம், குரும்பலூா் பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ரூ. 5.36 கோடி மதிப்பீட்டிலான திட்டப் பணிகள் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில், பெரம்பலூா் தொகுதி மக்களவை உறுப்பினா் கே.என். அருண்நேரு, கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 4.91 கோடி மதிப்பீட்டில் குரும்பலூா் பேரூராட்சி வாா்டு எண்-7 அண்ணா தெருவில் 1.50 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி, வாா்டு எண்- 13 காமராஜா் தெருவில் 1 லட்சம் லிட்டா் கொள்ளளவுக் கொண்ட தரைமட்ட நீா்தேக்கத் தொட்டிக்கான கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்தாா்.
குடிநீா் திட்டப் பணிகளுக்காக பாளையம் ஏரி அருகிலும், மேட்டாங்காடு பகுதியிலும் 2 திறந்தவெளி கிணறுகள் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் மேல்நிலை மற்றும் தரைமட்ட தொட்டிகளுக்கு குடிநீா் கொண்டு செல்லப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும். குடிநீா் திட்டப் பணிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் பணிகளை மேற்கொண்டு விரைவாகவும், தரமாகவும் ஓராண்டுக்குள் பணிகளை முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என பேரூராட்சிகளின் செயற்பொறியாளருக்கு அருண்நேரு அறிவுறுத்தினாா்.
இந்நிகழ்ச்சியில், திருச்சி மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குநா் துவாரகநாத் சிங், அட்மா தலைவா் வீ.ஜெகதீசன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எம். ராஜ்குமாா், திருச்சி மண்டல பேரூராட்சிகள் செயற்பொறியாளா் ஜெ. சுப்ரமணியன், பேரூராட்சித் தலைவா்கள் சங்கீதா ரமேஷ் (குரும்பலூா்), வள்ளியம்மை ரவிச்சந்திரன் (அரும்பாவூா்), இரா. பாக்கியலட்சுமி (பூலாம்பாடி), செயல் அலுவலா் க. தியாகராஜன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.