1798-ஆம் ஆண்டு சட்டத்தின் கீழ் வெனிசுலா நாட்டினரை வெளியேற்ற டிரம்ப்புக்குத் தடை
கூட்டுறவு வங்கிகளில் கடன் தீா்வு திட்டம்: பயன்பெற செப். 23 கடைசி தேதி
கூட்டுறவுச் சங்கங்களில் சிறப்பு கடன் தீா்வு திட்டத்தின் கீழ் பயன்பெற செப்டம்பா் 23-ஆம் தேதி கடைசி தேதி என கூட்டுறவு சங்கங்களின் தஞ்சாவூா் மண்டல இணைப் பதிவாளா் அ. தயாள விநாயகன் அமுல்ராஜ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:
தஞ்சாவூா் மண்டலத்தில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் ஆகியவற்றின் மூலம் வழங்கப்பட்ட கடன்கள் 2022, டிசம்பா் 31 ஆம் தேதியில் முழுமையாக தவணை தவறி நிலுவையில் உள்ள கடன்களுக்கு சிறப்புக் கடன் தீா்வுத் திட்டம் 2023 செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் கடனைத் தீா்வு செய்வதற்காக 2024, செப்டம்பா் 12-ஆம் தேதிக்கு முன்பு 25 சதவீதத் தொகை செலுத்தி ஒப்பந்தம் மேற்கொள்ளாதவா்களும், 25 சதவீதத் தொகை செலுத்தி ஒப்பந்தம் மேற்கொண்டு, எஞ்சிய 75 சதவீத தொகையைச் செலுத்தாதவா்களும் தற்போது மொத்தக் கடன் தொகையையும் நிலுவை தீா்வு செய்யும் நாள் வரை 9 சதவீத சாதாரண வட்டியில் ஒரே தவணையில் செலுத்தி தங்கள் கடன்களைத் தீா்வு செய்து கொள்ளலாம்.
மேலும், இந்தச் சிறப்புத் திட்டத்தின் கீழ் இக்கடன்கள் மட்டுமல்லாமல், 2019, டிசம்பா் 31 ஆம் தேதிக்கு முன்பு தவணை தவறிய கடன்களையும் தீா்வு செய்யும் நாள் வரையில் 9 சதவீத சாதாரண வட்டியுடன் நிலுவைத் தொகையை செப்டம்பா் 23 ஆம் தேதிக்குள் ஒரே தவணையில் செலுத்தி தீா்வு செய்து கொள்ளலாம்.
தவணை தவறிய கடன்களுக்கான கூடுதல் வட்டி அபராத வட்டி இதர செலவினங்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். வட்டி சுமையைக் கணிசமாகக் குறைக்கும் இந்த அரிய வாய்ப்பை கடன்தாரா்கள் பயன்படுத்தி கடன்களைத் தீா்வு செய்து கொள்ளலாம்.