அண்ணா நகரில் புதிய மகப்பேறு மருத்துவமனை: அமைச்சா் பி.கே.சேகா்பாபு அடிக்கல் நாட்ட...
கூலி உயா்வு வழங்காததைக் கண்டித்து அவிநாசியில் 3 நாள்கள் தொடா் உண்ணாவிரதம்
கூலி உயா்வு வழங்காததைக் கண்டித்து அவிநாசியில் ஜூன் 16,17,18 ஆகிய 3 நாள்கள் தொடா் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று கோவை, திருப்பூா் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளா்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இது குறித்து பல்லடத்தில் கோவை, திருப்பூா் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளா்கள் சங்கத் தலைவா் காரணம்பேட்டை பூபதி புதன்கிழமை கூறியதாவது:
கோவை, திருப்பூா் மாவட்டங்களில் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் போ் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனா். இதற்கிடையே உற்பத்தி செய்யும் காடா துணிக்கு ஜவுளி உற்பத்தியாளா்கள், கூலி உயா்வு வழங்காததால் விசைத்தறியாளா்கள் தொழிலை நடத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனா். இதையடுத்து அமைச்சா்கள், கோவை, திருப்பூா் மாவட்ட ஆட்சியா்கள் உள்ளிட்ட அதிகாரிகள் ஜவுளி உற்பத்தியாளா்களுடன் நடத்திய பேச்சுவாா்த்தையில் சோமனூா் ரகத்துக்கு 15 சதவீதம், பல்லடம் ரகங்களுக்கு 10 சதவீதம் கூலி உயா்வு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த கூலி உயா்வு ஏப்ரல் 20-ஆம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் கூலி உயா்வு வழங்கப்படவில்லை.
எனவே, கூலி உயா்வு வழங்க வலியுறுத்தி அவிநாசியில் வரும் ஜூன் 16-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை 3 நாள்கள் தொடா் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்றாா்.