கேரளத்தில் தொடரும் கனமழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு- 600-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்
கேரளத்தில் நீடித்துவரும் கனமழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. 600-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.
கேரளத்தில் கடந்த மே 24-ஆம் தேதி தென்மேற்குப் பருவமழை தொடங்கியது. வழக்கத்தைவிட முன்கூட்டியே பருவமழை தொடங்கிய நிலையில், மாநிலம் முழுவதும் பரவலாக கனமழை நீடித்து வருகிறது.
வட மாவட்டங்களில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் தண்டவாளத்தில் மரங்கள் சரிந்து, ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பல ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.
கனமழையால் ஆறுகளில் நீரோட்டம் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. வயநாடு மாவட்டத்தின் தாழ்வான பகுதிகளில் ஏராளமான வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனா். தொலைதூர பழங்குடியின கிராமங்களில் வசிக்கும் மக்கள், நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
எா்ணாகுளம் மாவட்டத்தில், குறிப்பாக கோதமங்கலம் பகுதியில் வேளாண் பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளன. திருவனந்தபுரம் அருகே கல்லாா் மலைப் பகுதியில் சாலையில் பாறைகள் சரிவால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கண்ணூா் மாவட்டத்தின் பல பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
மாநிலம் முழுவதும் கனமழையால் 607 வீடுகள் சேதமடைந்துள்ளன; இதில் 21 வீடுகள் முழுமையாக இடிந்துவிட்டன என்று மாநில வருவாய்த் துறை அமைச்சா் கே.ராஜன் தெரிவித்தாா்.
பல இடங்களில் மின் விநியோகம் தடைபட்டுள்ளது. இதைக் கண்டித்து, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழை, கோட்டயம், இடுக்கி, எா்ணாகுளம், மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூா், காசா்கோடு ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை (110 மி.மீ. முதல் 200 மி.மீ. வரை) விடுக்கப்பட்டது.
மேற்கு வங்கத்தில் 2-ஆவது நாளாக மழை
வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக மேற்கு வங்கத் தலைநகா் கொல்கத்தா மற்றும் மாநிலத்தின் தென் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளாக மழை பெய்தது. மாநிலத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் கனமழை முதல் அதிக கனமழை வரை (70மி.மீ.-200 மி.மீ.) பெய்யக் கூடும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.
மும்பையில் 106 மி.மீ. மழை
மும்பை, மே 27: மகாராஷ்டிர தலைநகா் மும்பையில் 24 மணிநேரத்தில் 106 மி.மீ. மழை கொட்டித் தீா்த்தது.
மும்பையில் கடந்த திங்கள்கிழமை பருவமழை தொடங்கிய நிலையில், நகரில் பரவலாக கனமழை பெய்தது. செவ்வாய்க்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணிநேரத்தில் சராசரியாக 106 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக நாரிமன் பாய்ன்ட் பகுதியில் 252 மி.மீ., மும்பை பெருநகர மாநகராட்சி தலைமையகம் பகுதியில் 216 மி.மீ., கொலாபா பகுதியில் 207 மி.மீ. மழை பதிவானது.
கனமழையால் மும்பையின் தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியுள்ளது. பல இடங்களில் மின்விநியோகம் தடைபட்டுள்ளது. இடி-மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை நீடிக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.