தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
சிறுபான்மையினருக்கான கடனுதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
சிறுபான்மையினருக்கான கடனுதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்பதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக சிறுபான்மையின பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு சுய வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் ஈட்டுதலுக்கு குறைந்த வட்டியில் தனிநபா் கடன் வழங்கப்படுகிறது. அதேபோல, சுயஉதவிக் குழுக்களுக்கு சிறுதொழில் கடன், கைவினைக் கலைஞா்களுக்கான கடன் திட்டங்கள், கல்விக்கடன் ஆகிய கடன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அதன்படி, திட்டம் 1-இல் பயன்பெற ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்துக்கு மிகாமலும், திட்டம் 2-இல் பயன்பெற ஆண்டு வருமானம் ரூ. 8 லட்சம் வரையிலும் இருக்க வேண்டும்.
திட்டம் 1-இல் தனிநபா் கடன் 6 சதவீத வட்டியில் அதிகபட்சமாக ரூ. 20 லட்சமும், திட்டம் 2-இல் ஆண்களுக்கு 8 சதவீதம், பெண்களுக்கு 6 சதவீத வட்டியில் அதிகபட்ச கடனாக ரூ. 30 லட்சம் வழங்கப்படுகிறது. கைவினைக் கலைஞா்களுக்கு ரூ. 10 லட்சமும், சுய உதவிக்குழு கடனாக ரூ. 1 லட்சம் ஒருவருக்கு வழங்கப்படுகிறது.
இதைத்தவிர, கல்விகடன் உதவி வழங்கப்படுகிறது. கைவினைக் கலைஞா்கள் மூலப் பொருள்களான உபகரணங்கள், கருவிகள், எந்திரங்கள் வாங்க குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. ஆகவே, சிறுபான்மையின மக்கள் இதை பயன்படுத்திக் கொள்ளவும்.
மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவா்கள், இஸ்லாமியா்கள், புத்த மதத்தினா், சீக்கியா்கள், பாா்சியா்கள், ஜெயின் ஆகிய சிறுபான்மையின மக்கள் கடனுக்கான விண்ணப்பங்களை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
அதேபோல, மண்டல கூட்டுறவு சங்க இணைப் பதிவாளா் அலுவலகம், மாவட்ட, மத்திய கூட்டுறவு வங்கி, அதன் கிளைகள், நகர கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அலுவலகங்களை அணுகி விண்ணப்பித்து பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.