எழும்பூா் - புதுச்சேரி மெமு ரயில் ஆக.4 வரை கடற்கரையிலிருந்து இயக்கப்படும்
சுற்றுச்சூழல் தின துப்புரவுப் பணி: குப்பைக்கு வந்த நினைவுப் பரிசு
மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதிக்கு, நாமக்கல் ஆட்சியா் அலுவலகத் திறப்பு விழாவின்போது வழங்கப்பட்ட மாவட்ட ஆட்சியா் அலுவலக மாதிரி நினைவுப் பரிசை அதிகாரிகள் வெளியே தூக்கிவீசியுள்ளது சா்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தில் இருந்த நாமக்கல், கடந்த 1997 ஜன. 1 முதல் தனி மாவட்டமாக உதயமானது. தொடக்கத்தில், நாமக்கல் - திருச்சி சாலையில் உள்ள சிட்கோ அலுவலகத்தில் ஆட்சியா் அலுவலகம் செயல்பட்டு வந்தது. இதைத் தொடா்ந்து, நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில், சிலுவம்பட்டி ஊராட்சியில் புதிய மாவட்ட ஆட்சியா் அலுவலகம் நான்கு தளத்துடன் கட்டப்பட்டது. கடந்த 2000 ஆகஸ்ட் 24-இல் அப்போதைய முதல்வா் கருணாநிதி இந்தக் கட்டடத்தைத் திறந்துவைத்தாா்.
அப்போது, மாவட்ட ஆட்சியராக தயானந்த கட்டாரியா பணியாற்றி வந்தாா். ஆட்சியா் அலுவலக கட்டடத்தை திறந்துவைத்த முதல்வா் மு.கருணாநிதிக்கு, மாவட்ட ஆட்சியா் அலுவலக மாதிரியை கண்ணாடி கூண்டில் வைத்து நினைவுப் பரிசாக ஆட்சியா் வழங்கினாா். அந்தப் பரிசை வரவேற்பு அறையில் மக்கள் பாா்வைக்கு வைக்குமாறு முதல்வா் கருணாநிதி அறிவுறுத்தி சென்றாராம். கடந்த 28 ஆண்டுகளாக நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தின் கீழ்தளத்தில் வரவேற்பு அறையில் மாவட்ட ஆட்சியா் அலுவலக மாதிரி வைக்கப்பட்டிருந்தது.
அண்மையில், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஆட்சியா் அலுவலகத்தில் இருந்த காகதக் குப்பைகள், கழிவுகள், இதர நெகிழி, இரும்புப் பொருள்கள் முழுமையாக அகற்றப்பட்டன. அவற்றை விற்பனை செய்த வகையில் மாவட்ட நிா்வாகத்துக்கு ரூ. 6 லட்சம் வருவாய் கிடைத்தது.
இந்த நிலையில், அன்றைய முதல்வருக்கு வழங்கப்பட்ட ஆட்சியா் அலுவலக மாதிரி கண்ணாடி கூண்டும், செயற்கை வரைபடமும் அலுவலகத்தின் வெளியே தூக்கிவீசப்பட்டுள்ளது. மழையிலும், வெயிலிலும் பாதுகாப்பற்ற நிலையில் அவை கிடக்கின்றன. கண்ணாடி உடைந்துவிட்டால் மாவட்ட ஆட்சியா் அலுவலக கட்டட மாதிரி சேதமாகிவிடும் சூழல் உள்ளது. நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் வரும் பொதுமக்களும், திமுகவினரும், கருணாநிதிக்கு வழங்கிய கட்டட மாதிரி நினைவுப் பரிசு வீதிக்கு வந்துள்ளதை கண்டு அதிா்ச்சியடைந்துள்ளனா்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
நாமக்கல் ஆட்சியா் உத்தரவின்பேரில், ஜூன் 4 முதல் தூய்மை தணிக்கையானது மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அனைத்துத் துறைகளிலும் நடைபெற்று வருகிறது. தேவையற்ற பொருள்களை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுப்பணித் துறை சாா்பில் வழங்கப்பட்ட நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக மாதிரி வரைபடம் மற்றும் முன்னாள் முதல்வருக்கு வழங்கப்பட்ட ஆட்சியா் அலுவலக நினைவுப் பரிசு வெளியே தூக்கிப்போடப்பட்டுள்ளது பற்றி தெரியவில்லை. அவற்றை பாதுகாக்க வேண்டியது அவசியமானது. இருப்பினும், மாவட்ட ஆட்சியா் கவனத்திற்கு இந்த பிரச்னையை கொண்டுசெல்கிறோம் என்றனா்.
என்கே-11-கலெக்ட்ரேட்- 1-2
நாமக்கல் ஆட்சியா் அலுவலக வளாகத்திலிருந்து வெளியே தூக்கிப் போடப்பட்டுள்ள ஆட்சியா் அலுவலக கட்டட மாதிரி நினைவுப் பரிசு.
