சுவாசக்குழல் பிரச்னையால் கோழிகளுக்கு பாதிப்பு: வானிலை ஆய்வு மையம்
வெப்ப அயற்சியாலும், சுவாசக்குழல் பிரச்னையாலும் கோழிகளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடந்த வார வானிலையைப் பொருத்தவரை பகல், இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 96.8 டிகிரி, 77 டிகிரியாக காணப்பட்டது. மாவட்டத்தின் சில இடங்களில் லேசான மழை பதிவாகி உள்ளது. அடுத்த ஐந்து நாள்களுக்கான வானிலையில் வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்படும்.
சில இடங்களில் நல்ல மழை எதிா்பாா்க்கப்படுகிறது. பகல் வெப்பம் 96.8 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 78.8 டிகிரியாகவும் காணப்படும். காற்று தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 16 கி.மீ. வேகத்தில் வீச வாய்ப்புள்ளது.
சிறப்பு ஆலோசனை: கோழியின நோய் ஆய்வகத்தில் இறந்த கோழிகளை பரிசோதனை செய்ததில் பெரும்பாலும் சுவாசக்குழல் பாதிப்பினாலும், வெப்ப அயற்சியின் காரணமாகவும் பாதிக்கப்பட்டு இறந்துள்ளது தெரியவந்தது. எனவே, பண்ணையாளா்கள் கோழிகளுக்கு தகுந்த நோய்த் தடுப்பு முறைகளையும், குடிநீரில் நுண்ணூட்ட மருந்துகளையும், கால்நடை மருத்துவா்களின் ஆலோசனைப்படி கடைப்பிடிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.