ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தை கொண்டுவர தமிழக அரசு தயங்குவது ஏன்?: கே.பாலகிருஷ்ணன...
செனையக்குடியில் சோழா்கால கலைப் பாணியிலான சிற்பங்கள் கண்டெடுப்பு
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் அருகே சோழா் கால கலைப் பாணியிலான சைவ, வைணவ, சமணச் சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் நிறுவனா் ஆ. மணிகண்டன், தலைவா் மேலப்பனையூா் கரு. ராஜேந்திரன் உள்ளிட்டோரைக் கொண்ட குழு இதை கண்டெடுத்துள்ளனா்.
இதுகுறித்து மங்கனூா் ஆ. மணிகண்டன் கூறியதாவது: செனையக்குடி பிடாரிகோவில் அருகே வயல் மேட்டில், சோழா் கால கற்றளி இடிமானங்களுடன் தவ்வை என்னும் மூத்ததேவி சிற்பம் காணப்படுகிறது. சிற்பத்தின் இரு புறங்களிலும், மாந்தன் மாந்தியுடன், உச்சியில் குடையும், பக்கவாட்டின் மேலாக இரு சாமரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
தோற்ற அமைதியின் அடிப்படையில் இதனை 11-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்ததாகக் கருதலாம். இவ்விடத்தில் சைவக்குறியீடான நந்தி சிற்பம் மண்ணில் புதைந்து காணப்படுகிறது.
கோயில் இடிமானத்தில் வைணவ நிலக்கொடைக்குரிய வாமனக் கோட்டுருவப் பலகைக்கல் கண்டெடுக்கப்பட்டு படி எடுக்கப்பட்டது. இதன் காலம் கணிக்கப்படவில்லை. இவ்விடத்தில் பிற்காலச் சோழா்களின் பாணியிலான தூண்கள், கட்டுமான உறுப்புகளுடன் காணப்படுகிறது.
செனையக் குடி ஊரின் பனைமரக்காட்டில் சிவன் கோயில் நிலத்தை குறிக்கும் சோழா் கால கலைப் பாணியிலான சூலக்கல் உள்ளது. இது 11-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்ததாக இருக்கலாம்.
கரும்பு வயல்வெளியில் 10-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த அய்யனாா் சிற்பம் உள்ளது. இதில் அய்யனாா் தாமரை மொட்டினை வலது கையில் ஏந்தியவாறும், இடது கையை முழங்காலில் வைத்தவாறு, சாந்த நிலையில் புன்னகைத்தவாறு செதுக்கப்பட்டுள்ளது.
தோற்ற அமைதியின் அடிப்படையில் இதனை 10-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்ததாகக் கருதலாம். மேலும், செனையக்குடி பெரிய கண்மாய் புதா்க் காட்டில் வலது கை உடைந்த நிலையில் செண்டு அமைப்புடன் 11-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த மற்றொரு அய்யனாா் சிற்பமும் உள்ளது. இரண்டிலும் ஜடா பாரம் எனப்படும் சுருண்ட முடியுடன் சோழா் கலைப்பாணி காணப்படுகிறது.
வயல்வெளியில் உள்ள ஒரு மேட்டில், ஆறு தலைகளுடன் கூடிய முருகன் சிற்பம், மயில் வாகனத்தில் அமா்ந்தவாறு மாா்புச் சங்கிலியுடன் 12 கரங்களில் வலது புறத்தில் ஆறு கரங்கள் மட்டுமே உள்ள நிலையில் ஆயுதங்களுடன் தாமரை பீடத்தில் வடிக்கப்பட்டுள்ளது. இச்சிற்பம் ஒப்புமையில் 12-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்ததாகக் கருதலாம்.
செனையக்குடி கண்மாயின் கிழக்குப்புறமுள்ள பொட்டல் காட்டில் சங்கு சக்கரத்துடன் நின்ற நிலையில், 13-ஆம் நூற்றாண்டின் கலைப் பாணியுடன் கூடிய விஷ்ணு சிற்பம் உள்ளது.
விஷ்ணு சிற்பத்தின் அருகிலேயே புதா் மறைவில் தலை மற்றும் கால் உடைந்த நிலையில் 9-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த எளிய தோற்ற அமைப்புடன் சமணச் சிற்பம் உள்ளது. இது ஏனைய சைவ, வைணவ சிற்பங்களுக்கு முந்தைய காலத்தைச் சோ்ந்தது.
அக்னி ஆற்றங்கரையில் தொடா்ச்சியாக சமணத் தடயங்கள் கிடைத்து வருவது சமணம் சாா்ந்த புதிய வரலாற்று ஆய்வுகளுக்கு வெளிச்சமாக இருக்கும் என்றாா் மணிகண்டன்.


