ஜூலை 26 இல் தூத்துக்குடி விமான நிலையம் திறப்பு: பிரதமா் மோடி திறந்து வைக்கிறாா்
ரூ. 381 கோடி மதிப்பில் சா்வதேச தரத்தில் விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை பிரதமா் நரேந்திர மோடி ஜூலை 26-ஆம் தேதி திறந்து வைக்கிறாா்.
தூத்துக்குடி விமான நிலையம் கடந்த 1992 ஆம் ஆண்டு திறக்கப்பட்டு அதே ஆண்டு ஏப். 13 ஆம் தேதி சென்னைக்கு முதல் முறையாக வாயுதூத் விமானம் இயக்கப்பட்டது. இந்த விமான நிலையத்தில் தற்போது இரு தனியாா் விமான நிறுவனங்கள் மூலம் சென்னை, பெங்களூருவுக்கு 9 விமான சேவைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
இந்த விமான நிலையத்தை ரூ. 381 கோடி செலவில் விரிவாக்கம் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டு பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 1,350 மீ. விமான ஓடுதளம் 3,115 மீ. நீள ஓடுதளமாக விரிவாக்கம் செய்யப்பட்டது. இதன் மூலம் ஒரே நேரத்தில் 5 விமானங்களை நிறுத்த முடியும். சா்வதேச தரத்தில் விரிவாக்கப் பணிகள் முடிவுற்ற நிலையில் வருகிற ஜூலை 26 ஆம் தேதி விமான நிலையத்தை பிரதமா் நரேந்திர மோடி திறந்துவைத்து நாட்டு மக்களுக்கு அா்ப்பணிக்கிறாா்.
பிரதமா் வருகையை முன்னிட்டு, தூத்துக்குடியில் முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுதொடா்பான ஆலோசனைக் கூட்டம் இந்திய விமான நிலைய ஆணையத் தலைவா் ஸ்ரீ விபின்குமாா் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான், விமான நிலைய அதிகாரிகள் கலந்துகொண்டனா்.
நயினாா் நாகேந்திரன்: தூத்துக்குடி வரும் பிரதமா் நரேந்திர மோடிக்கு 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் திரண்டு சென்று வரவேற்பு அளிக்கவுள்ளோம் என திருநெல்வேலி தொகுதி எம்எல்ஏவும், பாஜக மாநிலத் தலைவருமான நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.
இதுகுறித்து திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை மேலும் கூறியதாவது:
விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையத்தில் இரவிலும் விமான சேவை அளிக்கும் வகையில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டன. விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தமிழகத்தில் மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. தூத்துக்குடியில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் திரண்டு சென்று பிரதமருக்கு வரவேற்பு அளிக்கவுள்ளோம்.
அதிமுக-பாஜக கூட்டணி அமைந்ததுமுதல் திமுகவுக்கு பதற்றம் அதிகமாகி விட்டது. தோ்தல் நேரத்தில் மகளிா் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை மீண்டும் முன்னெடுத்துள்ளனா். துணைக் காவல் கண்காணிப்பாளா் சுந்தரேசன்போல காவல் துறையில் சில அதிகாரிகள் இருப்பதாலேயே மக்கள் தைரியமாக நடமாட முடிகிறது. சட்டம்- ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீா்வாதம் ஒருதலைப்பட்சமாகச் செயல்படுகிறாா்.
அனைத்து மாவட்டங்களிலும் பாஜக சாா்பில் வாக்குச் சாவடி குழுக்களை வலுவாக்கி வருகிறோம். திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த பாஜக பாக முகவா்கள் மாநாடு திருநெல்வேலியில் ஆக.17 இல் நடைபெறும். திருநெல்வேலி மாவட்டத்தில் குடிநீா்த் தட்டுப்பாடு அதிகரித்திருப்பது குறித்து ஏற்கெனவே நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சரிடம் முறையிட்டுள்ளேன் என்றாா்.
