தஞ்சாவூர்: `இவர்கள் மீது பரிவு காட்டுங்கள்' - அறப்பணியால் நெகிழ வைக்கும் ஆட்சியர்!
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக பிரியங்கா பங்கஜம் பொறுப்பேற்று ஒரு வருடம் நிறைவடைந்து விட்ட நிலையில் கடந்த 21ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மீட்டிங் ஒன்று நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், எஸ்.பி.ராஜாராம், சிட்டியூனியன் வங்கி காமக்கோடி மற்றும் அதிகாரிகள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், சாலையோரம் இருக்கும் ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்ற முதியோர்களை மீட்டு மறு வாழ்வு அளித்து வருவது குறித்து பலரும் நெகிழ்ந்து பேசியிருக்கின்றனர்.

``எத்தனையோ செயல்களை செய்திருக்கிறோம், திட்டங்களை செயல்படுத்துகிறோம். ஆனால் இது போன்ற நபர்களுக்கு செய்கின்ற சிறு உதவி அவர்கள் வாழ்வில் பெரும் மாற்றத்தை நிகழ்த்தி விடுகிறது. மறு வாழ்வு ஏற்படுகிறது" என மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களை மீட்கின்ற பொழுது தனக்கு நேர்ந்த அனுபவம் குறித்தும் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் பகிர்ந்துள்ளார். இதை கேட்ட எஸ்.பி.ராஜாராம் உள்ளிட்ட பலரும் நெகிழ்ச்சியடைந்தனர்.
இது குறித்து சிலரிடம் பேசினோம், ``தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக பிரியங்கா பங்கஜம் பொறுப்பேற்று ஒரு வருடம் முடிந்து விட்டது. அவர் பல்வேறு பணிகளை திறம்பட செய்திருக்கிறார். குறிப்பாக பெற்றோரை இழந்த மாணவர்கள் எண்ணிக்கை குறித்து கணக்கெடுப்பை நடத்தினார். அவர்களது நிலை அறிந்து எக்காரணத்தினாலும் அந்த மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் அரவணைப்பு என ஒரு திட்டத்தை ஏற்படுத்தி வேண்டிய உதவிகளை செய்து வருகிறார்.
சமீபத்தில் தஞ்சாவூருக்கு வந்த முதல்வர் ஸ்டாலின், பிரியங்கா பங்கஜம் செயலை பாராட்டியதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்ற முதியோர்களை அரவணைப்பதில் தனி கவனம் செலுத்துகிறார். தான் எத்தகைய பரபரப்பான சூழலில் இருந்தாலும், எங்கு சென்றாலும் சாலையோரத்தில் கிடக்கும் மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களை கண்டால் உடனே காரை நிறுத்தி போட்டோ எடுத்து விபரங்களுடன் ரெட்கிராஸ் முத்துக்குமாருக்கு தகவல் அளிக்கிறார்.
பின்னர் அந்த நபர், இசிஆர்சி மூலம் மீட்கப்படுவார்கள். இதையடுத்து போன் செய்து அவர்களது நலன் குறித்து அக்கறையாக விசாரிப்பார். யாரென்றே தெரியாத நபர்களின் நலனில் அவர் காட்டுகிற பரிவு எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தும். அய்யம்பேட்டை பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் திரிவதை பார்த்துள்ளார். உடனே அவரை மீட்க உத்தரவிட்டார். கிட்டத்தட்ட இரண்டு மாதம் சிகிச்சைக்கு பின் குணமடைந்தவரிடம் கலெக்டரே பேசியுள்ளார். இதில் அந்த இளைஞர் மத்தியப் பிரதேசத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வர அங்குள்ள கலெக்டரிடம் பேசி குடும்பத்துடன் அந்த இளைஞரை சேர்த்து வைத்தார்.
இதே போல் பெண் ஒருவரையும் சேர்த்து வைத்தார். இப்படி தான் பதவியேற்ற ஒரு வருடத்தில் 76 மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், 52 ஆதரவற்ற முதியோர்களை இசிஆர்சி மற்றும் ஒன் ஸ்டாப் சென்டர் பணியாளர்கள் மூலம் மீட்டு மறு வாழ்வு அளித்திருக்கிறார். தான் சென்ற பிறகும் இப்பணிகள் நிற்காமல் உணர்வு பூர்வமாக தொடர வேண்டும் என்பதற்காக இதில் பங்காற்றிய ஒவ்வொருவருக்கும் மரியாதை செய்ய நினைத்தார். அதன்படி அரசு அலுவலர்கள், டாக்டர்கள், போலீஸ், 108 ஊழியர்கள், தன்னார்வலர்கள் என பலருக்கும் சான்றிதழ் வழங்கி பாராட்டியதுடன் தயவு செய்து இப்படியான மனிதர்கள் மீது பரிவு காட்டுங்கள் என்றார்.
தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் சிறுநீர் கழிக்கும் இடத்தில் தலையில் அடிப்பட்ட நிலையில் ஆதரவற்ற பெரியவர் ஒருவர் விழுந்து கிடந்தார். இதை பார்த்த கலெக்டர் சட்டென இறங்கி அவரை மீட்பதற்கு உத்தரவிட்டார். கிட்டத்தட்ட பத்து நாள் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் அவர் இறந்து விட்டார். மனம் கலங்கிய கலெக்டர் அந்த பெரியவருக்கு மரியாதையான இறப்பு கிடைத்துள்ளது என்றார்.
மணிமண்டபம் அருகே பெண் ஒருவர் பூக்கடை வைத்துள்ளார். அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்ட மகள் ஒருவர் இருக்கிறார். இதை அவ்வழியாக சென்ற கலெக்டர் அறிந்து அந்த பெண்ணுக்கு உதவி செய்வதற்கு வழக்கம் போல் சென்றுள்ளார். அப்போது வயதான பெண், கலெக்டரை ஒருமையில் பேசி அடிக்க வந்திருக்கிறார். அதன் பிறகும் அந்த பெண் மீது ஆத்திரப்படாமல் அவர்களுக்கு அரசு சார்பில் கிடைக்க கூடிய உதவிகள் செய்தார். வங்கி கணக்கில் ரூ. 20,000 செலுத்தினார்.
மன நலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் டீக்கடை முன்பு உட்கார்ந்திருந்துள்ளார். உடனே அந்தக் கடைக்காரர் அந்த வயதான பெண்ணை தள்ளி போக சொல்லியுள்ளார். அதை புரிந்து கொள்ளும் நிலையில் அந்த பெண் இல்லை. உடனே கோபமான டீ கடைக்காரர், வயதான அந்த பெண் மீது சுடு தண்ணியை ஊற்றி விட்டார். இதில் அவர் துடி துடிக்க அந்த வழியில் போன கலெக்டர் யதேச்சையாக பார்த்து பதறியிருக்கிறார். கடை அருகே சென்று என்னம்மா ஆச்சுனு பட படத்திருக்கிறார். சுடு தண்ணீர் ஊற்றியவரை சிறையில் போடுவோமா என்றும் கேட்டுள்ளார். உடனே, வேணாம் தாயீ அவரை விட்டுடுங்கனு சொன்னாராம். அந்த நிலையிலும் மன்னிக்கும் அவரது குணம் தன்னை வியப்பில் ஆழ்த்தியதாக மீட்டிங்கில் கலெக்டர் பகிர்ந்தார். இதில் பலரும் நெகிழ்ந்தனர்" என்றனர்.