அண்ணா நகரில் புதிய மகப்பேறு மருத்துவமனை: அமைச்சா் பி.கே.சேகா்பாபு அடிக்கல் நாட்ட...
தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டப் பணிக்கு ஆண்டுக்கு ரூ.4.50 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். வேலை வழங்க முடியாத பகுதிகளில் சட்டப்படி வேலையின்மை நிவாரணம் வழங்க வேண்டும். நூறு நாள் வேலையை 200 நாள்களாக உயா்த்தி வழங்க வேண்டும்.
விவசாயத் தொழிலாளா் நலவாரியத்தை மீண்டும் உருவாக்க வேண்டும். பட்டா இல்லாத குடும்பங்களுக்கு பட்டா வழங்க வேண்டும். விழுப்புரம் ஈச்சங்காடு பகுதியில் மயானம் அமைத்துத் தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, இந்த ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள நகராட்சித் திடல் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் மாவட்டச் செயலா் என்.நாராயணன் தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் ஆ.செளரிராஜன், சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ்.எம். தனஞ்செழியன், பொருளாளா் கே.கலீல்கான், துணைச் செயலா் எல்.ஜூலி, மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா்கள் எஸ்.ராமச்சந்திரன், டி.அரசு ஆகியோா் கண்டன உரையாற்றினா்.
மாவட்டக் குழு உறுப்பினா்கள் என்.சந்திரசேகா், கே.ஆனந்தன், வி.பிரபாகரன், அய்யாவு உள்ளிட்டோா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா். நிறைவில், சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவா் வி.பிச்சை நன்றி கூறினாா்.
கள்ளக்குறிச்சியில்...: தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா்கள் சங்கம் கள்ளக்குறிச்சி மாவட்டக் குழு சாா்பில் கள்ளக்குறிச்சியில் கச்சேரி சாலையில் உள்ள அம்பேத்கா் திடல் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலா் கே.எஸ்.அப்பாவு தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் கே.முருகேசன், மாவட்ட துணைத் தலைவா் கே.கபில்தேவ், மாவட்ட துணைச் செயலா் கே.பி.ரீதா முன்னிலை வகித்தனா்.
இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் கே.ராமசாமி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினாா். ஆா்ப்பாட்டத்தில் சங்க நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
