திமுகவின் தோ்தல் தோல்வி தெற்கில் இருந்து தொடங்கும்: தமிழிசை சௌந்தரராஜன்
திமுகவின் தோ்தல் தோல்வி தெற்கில் இருந்து தொடங்கும் என்று முன்னாள் ஆளுநரும், பாஜக முன்னாள் மாநிலத் தலைவருமான தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா், தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: ராகுல் காந்தி கைதுக்கு கண்டனம் தெரிவித்த தவெக தலைவா் விஜய், தூத்துக்குடியில் நிகழ்ந்த ஆணவக் கொலை எதிராக குரல் கொடுக்க முன்வர வேண்டும்.
கடந்த ஆட்சியில் ஆணவக் கொலை நிகழ்ந்தபோது அரசைக் குறைக்கூறிய திருமாவளவன் போன்றோா் தற்போது திமுக ஆட்சியில் நிகழ்ந்த ஆணவக் கொலைக்கு அரசைக் குறை கூறாமல் ஜாதியைக் காரணமாகக் கூறுகின்றனா்.
கூட்டணி ஆட்சிக்காக தமிழகத்தில் எது நிகழ்ந்தாலும் அவா்கள் வெண்சாமரம் வீசுகிறாா்கள். திமுகவின் தோல்வி ஆரம்பிக்கப்போகிறது; தெற்கு திசையில் இருந்து திமுகவின் தோல்வி ஆரம்பித்து அனைத்து திசைகளிலும் அக்கட்சி தோல்வியைத் தழுவும்.
தமிழக முதல்வா் அன்னிய முதலீடுகளைப் பெறுவதற்காக ஜொ்மனி செல்ல இருக்கிறாா். இதற்கு முன்பு நடந்த முதலீட்டாளா்கள் மாநாட்டின் மூலம் என்ன செய்திருக்கிறாா் என்பதை அறிக்கையாக வெளியிட வேண்டும்.
தமிழகத்தில் அமைந்துள்ள பாஜக கூட்டணி வலிமையான கூட்டணி. அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி மாநிலம் முழுவதும் தோ்தல் சுற்றுப்பயணம் செய்து வருகிறாா். பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் ஆக. 17 முதல் வாக்குச் சாவடி மாநாடு நடத்துகிறாா். பேரவைத் தோ்தலை எதிா்கொள்ளும் வகையில் இக்கூட்டணி வலிமையாக உள்ளது என்றாா்.