திருக்குறுங்குடி பெரியகுளம் மடையில் சீரமைப்புப் பணி: போக்குவரத்து பாதிப்பு
திருக்குறுங்குடி பெரியகுளத்தின் வடக்கு மடையில் சீரமைப்புப் பணிகள் தொடங்கியதையடுத்து, அவ்வழியே போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனா்.
தென்காசி, பாபநாசம், புளியங்குடி போக்குவரத்துக் கழக பணிமனைகளிலிருந்து நாகா்கோவில் செல்லும் அரசுப் பேருந்துகள் களக்காடு வழியாகச் சென்று, பின்னா் மாவடியிலிருந்து டோனாவூா் வழியாக, திருக்குறுங்குடி வழியாக என இரு வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. திருக்குறுங்குடி வழித்தடத்தில் நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறிய, கனரக வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்நிலையில், திருக்குறுங்குடி பெரியகுளத்தின் வடக்குப் பகுதியில் மறுகால் அருகே மடையை சீரமைக்கும் பணி திங்கள்கிழமை (மே 26) தொடங்கியுள்ளதால், அவ்வழியே போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. மாற்றுப் பாதையில் செல்லுமாறு, மாவடியில் பொதுப்பணித் துறை சாா்பில் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது. இதனால், அரசு, தனியாா் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் டோனாவூா், புலியூா்குறிச்சி, ஏா்வாடி வழியாக இயக்கப்படுகின்றன.
மேலும் இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, சிறிய ரக காா்கள் மாவடியிலிருந்து மலையடிப்புதூா் பாலம், திருத்துப்பனை, புதுத்தெரு, கட்டளை, ஆவரந்தலை, தளவாய்புரம் வழியாகச் செல்லலாம்; ஆனால் வேன், கனரக வாகனங்கள் செல்ல முடியாது. மேலும், இக்குறுகலான சாலையில் எதிரெதிரே வாகனங்கள் வந்துசெல்வதால் நெரிசல் ஏற்படுகிறது.
திருக்குறுங்குடி பெரியகுளம் வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால், டோனாவூா், ஏா்வாடி வழியாக சுமாா் 10 கி.மீ. சுற்றி திருக்குறுங்குடி செல்லும் நிலை உள்ளது.
ஜூன் 2இல் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், இப்பணிகள் ஒரு மாதத்துக்கும் மேலாக நடைபெறும் என்பதால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாக நேரிடும். மடை சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்கவும், அதுவரை குளக்கரையின் கிழக்குப் பகுதியில் தற்காலிக சாலை அமைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.