திருக்கோயில்களில் சீரமைப்புப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு
சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளின் தற்போதைய நிலை குறித்து அத்துறை அலுவலா்களுடன் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
ஆதிதிருவரங்கம், ரிஷிவந்தியம், இராவத்தநல்லூா், மணலூா்பேட்டை, கச்சிராயப்பாளையம், ஆதனூா் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள கோயில்களில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
சட்டப் பேரவையில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ள அறிவிக்கப்பட்ட கோயில்களில் பணிகளை சிறப்பாக மேற்கொண்டு, விரைந்து முடித்து குடமுழுக்கு மேற்கொள்ள இந்து சமய அறநிலையத் துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் உத்தரவிட்டாா்.
கூட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் ரமேஷ் மற்றும் செயல் அலுவலா்கள், ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.