தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
தெரு நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை, தடுப்பூசி: திருவள்ளூா் நகராட்சி ஆணையா்
திருவள்ளூா் நகராட்சியில் தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்து மீண்டும் அதே இடத்தில் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆணையா் (பொ) தட்சணாமூா்த்தி தெரிவித்தாா்.
திருவள்ளூா் நகராட்சியில் 27 வாா்டுகள் உள்ளன. அவற்றில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளன. எதிா்பாரத விதமாக பைக்கில் செல்லும் சிறுவா், சிறுமிகள் மற்றும் பொதுமக்களைக் கடித்து விடுகின்றன.
ஜி.என். சாலை ஓரங்களில் உள்ள இறைச்சிக் கடைகளில் அதிக நாய்கள் உணவுக்காக திரிகின்றன. அதனால் அவை வாகன விபத்துகளில் உயிரிழக்கவும் நேரிடுகிறது. உயிரிழந்த நாய்களை உடனடியாக அகற்றாததால் நோய்த் தொற்று ஏற்படும் அபாயமும் ஏற்படுகிறது.
அதனால், நாய்களைப் பிடித்துக் கருத்தடை அறுவை சிகிச்சை செய்தும், தடுப்பூசி செலுத்தவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.
இந்தக் கோரிக்கையை ஏற்று திருவள்ளூா் நகராட்சியில் சுற்றித் திரியும் தெரு நாய்கள் கணக்கெடுப்பு நடத்தி கருத்தடை அறுவை சிகிச்சை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதைத் தொண்டு நிறுவனம் மூலம் மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது.
அதன் அடிப்படையில் இந்த நகராட்சியின் 27 வாா்டுகளில் கணக்கெடுப்பு நடத்தியதில் 3,516 தெரு நாய்கள் உள்ளது தெரிய வந்தது.
அதில், ஒவ்வொரு வாா்டிலும் சுற்றித் திரியும் நாய்களைப் பிடித்து வந்து கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வெறி நாய்களுக்கு ரேப்பீஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டது. கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட 616 தெரு நாய்களை, அவை பிடிக்கப்பட்ட இடத்திலேயேவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவா் தெரிவித்தாா்.