தேசிய கூடைப்பந்து லீக் போட்டி: இந்தியன் வங்கி, கடற்படை அணிகள் வெற்றி
தேனி மாவட்டம், பெரியகுளத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேசிய அளவிலான கூடைப்பந்து லீக் போட்டியில் இந்தியன் வங்கி, கடற்படை அணிகள் வெற்றி பெற்றன.
பெரியகுளத்தில் பி.டி.சிதம்பரசூரியநாராயணன் நினைவு சுழல் கோப்பைக்கான தேசிய கூடைப்பந்து போட்டிகள் நடைபெற்று வருகின்றன. முதல் கட்டமாக தகுதிச் சுற்றுப்போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற்றன. இந்தப் போட்டியில், புதுதில்லி இந்திய தரைப்படை, சென்னை தமிழக காவல் துறை, புதுதில்லி விமானப்படை உள்பட 22 அணிகள் கலந்து கொண்டன.
திங்கள்கிழமை நடைபெற்ற முதல் நாள் லீக் போட்டியில் லோனாவாலா இந்திய கடற்படை அணியை, சென்னை இந்தியன் வங்கி அணி 78 - க்கு 57 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றது. இதேபோல, புதுதில்லி விமானப்படை அணியை, சென்னை வருமானவரித் துறை அணி 79 -க்கு 79 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரண்டாம் நாள் லீக் போட்டிகள் நடைபெற்றன. இதில் புதுதில்லி விமானப்படை அணியை, சென்னை இந்தியன் வங்கி அணி 84 -க்கு 63 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில் வருமானவரித் துறை அணியை லோனாவாலா இந்திய கடற்படை அணி 78-க்கு 76 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றது. புதன்கிழமை (மே 21) மாலை பரிசளிப்பு விழா நடைபெறும்.