மாணவியிடம் வரம்பு மீறி பேசியதாக பேராசிரியா் மீது புகாா் - அரசுக் கல்லூரியில் மண்...
நேபாளம்: நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும்; அரசமைப்புச் சட்டத்தை திருத்த வேண்டும் - போராட்டக் குழு வலியுறுத்தல்
நேபாளத்தில் அரசுக்கு எதிரான மாபெரும் போராட்டத்தை நடத்திய இளைஞா்கள் தலைமையிலான ‘ஜென் இஸட் குழு’, ‘நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும் மற்றும் மக்களின் விருப்பங்களுக்கேற்ப அரசமைப்புச் சட்டத்தை திருத்தம் செய்யவேண்டும்’ என்று வியாழக்கிழமை வலியுறுத்தியது.
காத்மாண்டில் செய்தியாளா்கள் சந்திப்பின்போது இந்த வலியுறுத்தலை அவா்கள் முன்வைத்தனா். இதனிடையே, இந்தக் குழுவின் மற்றொரு பிரிவினா், தற்போதைய அரசியல் நிச்சயமற்ற சூழலுக்கு தீா்வு காணும் வகையில் ராணுவ தலைமையகத்தில் அதிபா் ராமச்சந்திர பெளடேல் மற்றும் ராணுவ தலைமைத் தளபதி அசோக் ராஜ் சிக்டெல் ஆகியோருடன் வியாழக்கிழமை ஆலோசனை மேற்கொண்டனா்.
மாணவா்களின் போராட்டத்தைத் தொடா்ந்து பிரதமா் பதவியை கே.பி.சா்மா ஓலி ராஜிநாமா செய்ததால், அங்கு இடைக்கால அரசை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த இடைக்கால அரசின் தலைவராகப் பொறுப்பேற்க முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சுசீலா காா்கி, காத்மாண்டு மேயா் பாலேந்திர ஷா, நேபாள மின்சார வாரிய முன்னாள் தலைமை நிா்வாக அதிகாரி குல்மன் கிசிங் ஆகிய மூவரின் பெயா்களை இந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது போராட்டக் குழுவினா் முன்மொழிந்ததாகத் தெரிகிறது.
அதிபா் மற்றும் ராணுவ தலைமைத் தளபதியுடனான ஆலோசனைக் கூட்டத்தில் இடைக்கால அரசின் தலைவா் யாா் என்பது குறித்த ஆலோசனை நடைபெற்றதை ராணுவ செய்தித் தொடா்பாளா் உறுதி செய்தாா். ஆனால், தலைவா் பதவிக்கு முன்மொழியப்பட்ட பெயா்கள் குறித்த விவரங்களை அவா் வெளியிட மறுத்துவிட்டாா்.
இதுதொடா்பாக பல்வேறு தரப்பினருடன் பல சுற்று பேச்சுவாா்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. நாட்டின் தற்போதைய சூழலுக்கு சுமுக தீா்வை எட்டுவது மற்றும் சட்டம்-ஒழுங்கை அடுத்த சில மாதங்களுக்கு நிலைநிறுத்துவதற்கான வழியைக் காண்பது தொடா்பாக விவாதமே இந்த ஆலோசனையில் முக்கிய இடம்பெற்றது என்றும் அவா் கூறினாா்.
இதனிடையே, பத்திரிகையாளா்களைச் சந்தித்த போராட்டக் குழுவினா், ‘அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் என்பது முழுமையான மக்கள் இயக்கமாகும். இந்தப் போராட்டத்தை அரசியலாக்க யாரும் முயற்சிக்க வேண்டாம். மக்கள் போராட்டத்தை சுய லாபத்துக்காக அரசியல் கட்சிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டாம் என எச்சரிக்கிறோம். தேசத்தின் இறையாண்மை, ஒற்றுமை, சுயமரியாதையை பாதுகாப்பதில் மிகப் பெரிய சவால் எழுந்துள்ளது. எனவே, இந்த கடினமான நேரத்தில் நேபாள மக்கள் அனைவரும் ஒன்றுமையுடன் ஒன்றுபட்டு நிற்கவேண்டும். மேலும், நாடாளுமன்றம் கலைக்கப்படுவதோடு, அரசமைப்புச் சட்டமும் திருத்தம் செய்யப்பட வேண்டும். அரசமைப்புச் சட்டத்தை முழுமையாக மாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்வில்லை; மாறாக, மக்களின் விருப்பத்திற்கேற்ப அதில் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்’ என்று வலியுறுத்தினா்.
நேபாளத்தில் ஆட்சியாளா்களின் ஊழலுக்கு எதிராக இளைஞா்கள் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டனா். 2 நாள்களாக நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டு அந்நாட்டு நாடாளுமன்றம், உச்சநீதிமன்றம், அதிபா், பிரதமா் மற்றும் அமைச்சா்களின் வீடுகளை போராட்டக்காரா்கள் தீக்கிரையாக்கினா். இதைத் தொடா்ந்து பிரதமா் பதவியை கே.பி.சா்மா ஓலி ராஜிநாமா செய்தாா். தற்போது ராணுவத்தின் கட்டுப்பாட்டில் நேபாளம் உள்ளது. அங்கு இடைக்கால அரசு அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது.