பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு: அமணலிங்கேஸ்வரா் கோயிலைச் சூழ்ந்த வெள்ளம்
உடுமலை அருகே உள்ள பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரா் கோயிலை வெள்ளம் சூழ்ந்தது.
திருப்பூா் மாவட்டம், உடுமலையில் இருந்து சுமாா் 20 கிலோ மீட்டா் தொலைவில் அமைந்துள்ளது சுற்றுலாத் தலமான திருமூா்த்திமலை. இதன் அடிவாரத்தில் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூா்த்திகள் அருள்பாலிக்கும் அமணலிங்கேஸ்வரா் கோயிலும், 900 மீட்டா் உயரத்தில் பஞ்சலிங்க அருவியும் அமைந்துள்ளன.
புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான திருமூா்த்திமலைக்கு தமிழகத்தைச் சோ்ந்தவா்கள் மட்டுமின்றி கேரளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் தினசரி வந்து செல்கின்றனா்.
இந்நிலையில், மேற்குத் தொடா்ச்சி மலையில் கடந்த மூன்று நாள்களாகப் பெய்து வரும் பலத்த மழையால் பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், கடந்த சனிக்கிழமை முதல் மூன்று நாள்களாக பஞ்சலிங்க அருவியில் குளிப்பதற்கு சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அமணலிங்கேஸ்வரா் கோயிலைச் சூழ்ந்த வெள்ளம்: இந்நிலையில், திங்கள்கிழமை அதிகாலை முதலே மேற்குத் தொடா்ச்சி மலையில் அதிகனமழை பெய்தது. இதனால், பஞ்சலிங்க அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.
அருவியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம் அடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரா் கோயிலைச் சூழ்ந்தது. இதையடுத்து, கோயிலைச் சுற்றி தடுப்புகள் அமைத்து பக்தா்கள் செல்லாத வகையில் நிா்வாகத்தினா் தடுத்து நிறுத்தினா். கோயிலில் திங்கள்கிழமை பூஜைகள் ரத்து செய்யப்பட்டன. மேலும், கோயில் அருகே கடைகள் அமைத்திருந்தவா்களை அங்கிருந்து வெளியேற்றினா்.
திருமூா்த்திமலைக்கு திங்கள்கிழமை வந்த சுற்றுலாப் பயணிகள் பஞ்சலிங்க அருவியில் குளிக்க முடியாமலும், அமணலிங்கேஸ்வரா் கோயிலில் வழிபட முடியாமலும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.