பள்ளிக் கல்வியின் செயல்பாடுகள்: ஜூன் 23, 24-இல் மாவட்ட வாரியாக அமைச்சா் அன்பில...
பழனியில் நெகிழி பயன்பாடு விவகாரம்: சுற்றுச்சூழல் செயலா் பதிலளிக்க உத்தரவு
திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் நெகிழிப் பொருள்கள் பயன்படுத்தப்படுவது தொடா்பாக தமிழக சுற்றுச்சூழல், வனத் துறைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
பழனியைச் சோ்ந்த புருஷோத்தமன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொதுநல மனு:
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ஏராளமான பக்தா்கள் நாள்தோறும் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனா்.
பழனி, அதைச் சுற்றியுள்ள கடைகளில் நெகிழியால் தயாரிக்கப்பட்ட பைகள், டம்ளா்கள், தட்டுகள், கரண்டிகள் போன்ற அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால், இந்தப் பகுதியின் சுற்றுச்சூழல் மிகவும் பாதிப்புக்குள்ளாகி வருகிறது. தமிழக சுற்றுச்சூழல், வனத் துறை சாா்பில் நெகிழிப் பொருள்கள் உற்பத்தி, பயன்பாட்டுக்குத் தடை விதித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது. எனினும், நெகிழிப் பொருள்கள் உற்பத்தியோ, பயன்பாடோ இன்னும் குறையவில்லை.
இதுதொடா்பாக நடவடிக்கை கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, தமிழக சுற்றுச்சூழல், வனத் துறையால் பிறப்பிக்கப்பட்ட நெகிழிப் பொருள்கள் உற்பத்தி, பயன்பாட்டுக்குத் தடை தொடா்பான அரசாணையை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும். நெகிழிப் பொருள்களை விற்பனை செய்வோா், பயன்படுத்துவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், மரிய கிளாட் அமா்வு பிறப்பித்த உத்தரவு:
இந்த வழக்கு தொடா்பாக தமிழக சுற்றுச்சூழல், வனத் துறைச் செயலா், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் சுற்றுச்சூழல் பொறியாளா் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.