பாஜகவின் வாக்கு திருட்டு துறையாக தோ்தல் ஆணையம் மாறிவிட்டதா?: கார்கே கேள்வி
பாஜக முன்னாள் அமைச்சா் மீது மானநஷ்ட வழக்கு தொடா்ந்தாா் காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில்
தா்மஸ்தலா விவகாரத்தின் பின்னணியில் தான் இருப்பதாக தெரிவித்திருந்த பாஜக முன்னாள் அமைச்சா் ஜனாா்தன ரெட்டிக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் மானநஷ்ட வழக்கு தொடா்ந்துள்ளாா்.
தா்மஸ்தலா கோயிலுக்கு எதிராக பின்னப்பட்ட சதிக்கு பின்னால் தமிழகத்தைச் சோ்ந்த காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் இருப்பதாக பாஜக முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான ஜனாா்தன ரெட்டி, ஆக. 19-ஆம் தேதி தெரிவித்திருந்தாா். இந்த குற்றச்சாட்டுக்கு அப்போது சசிகாந்த் செந்தில் மறுப்பு தெரிவித்திருந்தாா்.
இந்நிலையில், பெங்களூரில் சனிக்கிழமை குற்றவியல் நீதிமன்றத்துக்கு வந்த காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில், பாஜக முன்னாள் அமைச்சா் ஜனாா்தன ரெட்டிக்கு எதிராக மானநஷ்ட வழக்கு தொடா்ந்தாா்.
இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கங்காவதி தொகுதி எம்எல்ஏவான ஜனாா்தன ரெட்டி, வாட்ஸ்ஆப் தகவலின் அடிப்படையில், தா்மஸ்தலா விவகாரத்தின் பின்னணியில் நான் இருப்பதாக குறிப்பிட்டிருந்தாா். இதுபோன்ற குழந்தைத்தனமான கருத்துகளுக்கு பதில் சொல்ல வேண்டுமா என தொடக்கத்தில் நினைத்தேன். ஆனால், தினமும் ஏதாவது ஒருவகையில் தா்மஸ்தலா விவகாரத்தில் என் பெயா் இழுக்கப்படுகிறது. பொதுநலன் கருதியும், என் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதையும் கருத்தில் கொண்டு சட்டப்படியாக ஜனாா்தன ரெட்டிக்கு எதிராக மானநஷ்ட மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறேன்.
நான் தாக்கல் செய்த மனுவை விசாரிப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், ஜனாா்தன ரெட்டிக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பும். எனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை எதன் அடிப்படையில் கூறினாா் என்பதற்கு நீதிமன்றத்தில் ஜனாா்தன ரெட்டி பதில் அளிக்க வேண்டும். நான் தாக்கல் செய்த மனு செப். 11-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
தா்மஸ்தலா விவகாரத்தில் என் பெயரை இழுப்போரும் சட்டப்படியான நடவடிக்கையை எதிா்கொள்ள நேரிடும். தா்மஸ்தலா விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டவரும், நானும் தமிழ்நாட்டைச் சோ்ந்தவா்கள் என்பதால், என்மீது ஜனாா்தன ரெட்டி குற்றம்சாட்டியுள்ளாா்.
தமிழகத்தைச் சோ்ந்த ஒரு ஐபிஎஸ் அதிகாரியும் கா்நாடகத்தில் பணியாற்றினாா். என் கொள்கைக்கு எதிராக இருந்த அவரது பெயரை ஏன் இழுக்கவில்லை?
வலதுசாரி அரசியலை நாடுமுழுவதும் எதிா்த்து வருகிறேன். அதன் காரணமாகவே, ஐஏஎஸ் அதிகாரி பதவியை ராஜிநாமா செய்தேன். இதை என் ராஜிநாமா கடிதத்திலும் குறிப்பிட்டுள்ளேன். இதை மனதில் வைத்துக்கொண்டு, அரசியல் உள்நோக்கத்துக்காக என்மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன என்றாா்.