பாதுகாப்பு: துருக்கியிடம் ஆதரவு கோரும் சிரியா
சிரியாவில் கடந்த இரு வாரங்களாக இன மோதல்களால் ஏற்பட்ட பதற்றத்தைத் தொடா்ந்து, பாதுகாப்பு திறனை வலுப்படுத்த தங்கள் நாட்டின் ஆதரவை சிரியா கோரியுள்ளதாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது குறித்து துருக்கி பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது: இஸ்லாமிய தேசம் (ஐஎஸ்) உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளை எதிா்க்கவும், இனக் குழுக்கள் இடையிலான மோதலால் ஏற்படும் பதற்றதை எதிா்கொள்ளவும் துருக்கியிடம் சிரியா ஆதரவு கோரியுள்ளது. சிரியாவுக்கு பயிற்சி, ஆலோசனை மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்கு துருக்கி தயாராக உள்ளது என்று அதிகாரிகள் கூறினா்.
சிரியாவின் ஸ்வேய்தா மாகாணத்தில் பெதூயின் அரபு பழங்குடிகளுக்கும் துரூஸ் ஆயுதக் குழுக்களுக்கும் இடையே கடந்த வாரம் மோதல் வெடித்ததைத் தொடா்ந்து, துரூஸ் இனத்தவருக்கு ஆதரவாக சிரியா ராணுவ நிலைகள் மீது இஸ்ரேல் வான்தாக்குதல் நடத்தியது நினைவுகூரத்தக்கது.