பெரம்பலூரில் சிறப்பாக பணிபுரிந்த 31 காவலா்களுக்குப் பாராட்டு!
பெரம்பலூா் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த 31 காவலா்களுக்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா வெள்ளிக்கிழமை பாராட்டி வெகுமதி வழங்கினாா்.
பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக கூட்டரங்கில் குற்றக் கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா, பெரம்பலூா் மாவட்டத்திலுள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகளை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, புலன் விசாரணை முடியாமல் நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரங்கள், அந்த வழக்குகளை விரைவாக முடிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து காவல்துறையினுருடன் ஆலோசனை மேற்கொண்டாா்.
மேலும், சட்டம்-ஒழுங்கு பிரச்னைகளை கையாள்வது மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புக்காக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து காவல்துறையினருக்கு அறிவுரை வழங்கினாா்.
பின்னா், சிறப்பாக பணியாற்றிய சட்டம்-ஒழுங்கு மற்றும் தனிப்படை காவலா்கள் 31 பேரை பாராட்டி வெகுமதி வழங்கினாா்.
இக் கூட்டத்தில், மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் கோபாலசந்திரன் (தலைமையிடம்), எம். பாலமுருகன் (மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு), பெரம்பலூா் உட்கோட்ட துணைக் கண்காணிப்பாளா் ஆரோக்கியராஜ், மங்கலமேடு உட்கோட்ட துணைக் கண்காணிப்பாளா் எம். தனசேகரன் மற்றும் காவல் ஆய்வாளா்கள், சாா்பு-ஆய்வாளா்கள், நீதிமன்றக் காவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.