பேராவூரணியில் லாரி - பைக் மோதிய விபத்தில் 2 பேர் பலி!
பேராவூரணி அரசு மருத்துவமனை அருகே சந்தைக்கு பொருள்கள் வாங்க இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் லாரியில் சிக்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம் மேற்பனைக்காடு அருகே உள்ள பாலகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் ரெத்தினம் மகன் சிவராமன் ( 29). இ-சேவை மையம் நடத்தி வருந்த இவர், அதே பகுதியைச் சேர்ந்த உறவினரான ராஜசேகரன் என்பவர் மகனான, ஆயிங்குடி அரசுப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வரும் மாணவன் அறிவுக்கரசு ( 11) என்பவருடன், பேராவூரணி சந்தைக்கு பொருள்கள் வாங்க வந்துள்ளார்.
பட்டுக்கோட்டை சாலையில் உள்ள ஸ்டேட் வங்கி ஏடிஎம்-ல் பணம் எடுத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் அரசு மருத்துவமனை அருகே சாலையைக் கடக்க முயன்ற போது, சாலையின் மறுபுறத்தில், தூத்துக்குடியில் இருந்து உர மூட்டைகளை ஏற்றி வந்து, பட்டுக்கோட்டை அருகே துவரங்குறிச்சியில் இறக்கி விட்டு திரும்பிய லாரியின் பக்கவாட்டில் எதிர்பாராதவிதமாக இரு சக்கர வாகனம் மோதியதில் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த பேராவூரணி காவல் உதவி ஆய்வாளர் ஜீவானந்தம் மற்றும் போலீசார் இருவரது உடலையும் மீட்டு, பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
லாரியை ஓட்டி வந்த ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டம் கீழசிறுபூர் கிராமத்தைச் சேர்ந்த சாத்தையா மகன் சதீஷ் கண்ணன் ( 23) என்பவரை போலீசார் அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.
சந்தைக்குப் பொருள்கள் வாங்கச் சென்ற இருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.