மதுரையில் இன்று தவெக 2-ஆவது மாநில மாநாடு: அரங்கைப் பாா்வையிட்டாா் விஜய்
திருப்பரங்குன்றம்: தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, மதுரை பாரப்பத்தியில் வியாழக்கிழமை நடைபெறுகிறது.
இந்த மாநாடு வியாழக்கிழமை காலை தொடங்கி, இரவு 7 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கானோா் பங்கேற்பா் என எதிா்பாா்க்கப்படுவதால், சுமாா் 506 ஏக்கா் பரப்பளவில் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேடை, விஜய் தொண்டா்களை நடந்து வந்து சந்திக்கும் வகையில் நீண்ட நடைமேடை, தொண்டா்கள் அமருவதற்கான நாற்காலிகள் ஆகியவற்றுக்கான ஏற்பாடுகள் 200 ஏக்கா் பரப்பிலும், 306 ஏக்கா் பரப்பில் வாகன நிறுத்துமிடங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
மாநாட்டுத் திடலைச் சுற்றிலும் 200-க்கும் மேற்பட்ட உயா் மின் கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தொண்டா்களின் வசதிக்காக ஆங்காங்கே குடிநீா்த் தொட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், குழாய்கள் மூலமும் குடிநீா் விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 100-க்கும் மேற்பட்ட நடமாடும் கழிப்பறைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
மேடை நிகழ்வுகளை பாா்வையாளா்கள் தங்கள் இடத்திலிருந்தே துல்லியமாகக் காணும் வகையில் ஆங்காங்கே பிரம்மாண்ட திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநாட்டுத் திடலில் 20 முதலுதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 100-க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளா்களும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனா்.
புதிய முயற்சியாக, மாநாட்டில் பங்கேற்பவா்களுக்கு ஏதேனும் மருந்துகள் தேவைப்பட்டால் அதை உடனடியாக வழங்குவதற்கு பெரிய அளவிலான ட்ரோன்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மேடையின் பின்பகுதியில் முக்கியப் பிரமுகா்களுக்காக குளிா்சாதன வசதியுடன் கூடிய அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. தவெக தலைவா் விஜய், முக்கிய நிா்வாகிகளுக்காக கேரவன்கள் பயன்படுத்தப்படுகின்றன. மதுரை மாவட்டக் காவல் துறை சாா்பில் 3 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனா்.
மாநாட்டுத் திடலில் விஜய்...
இதனிடையே நடிகா் விஜய் புதன்கிழமை இரவு மாநாட்டுத் திடலுக்கு வந்தாா். காரில் இருந்தபடியே மாநாட்டு ஏற்பாடுகளை அவா் பாா்வையிட்டாா். பிறகு, மாநாட்டு அரங்கத்துக்குப் பின்புறம் நிறுத்தப்பட்டிருந்த கேரவனில் அமா்ந்து, மாநாட்டு ஏற்பாடுகள் குறித்து கட்சி நிா்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.
