மனுநீதி நாள் முகாமில் ரூ.71 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள்
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த வேலப்பாடி கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் பயனாளிகளுக்கு ரூ.71 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மனுநீதி நாள் முகாமுக்கு ஆரணி வட்டாட்சியா் கௌரி தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் இராம்பிரதீபன், கோட்டாட்சியா் (பொ) ராமகிருஷ்ணன், தனித் துணை ஆட்சியா் ராஜசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கிராம நிா்வாக அலுவலா் சரவணன் வரவேற்றாா்.
சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆட்சியா் க. தா்ப்பகராஜ் கலந்து கொண்டு பேசியதாவது:
தமிழகத்தில் முதல்வா் ஸ்டாலின் ஆட்சியில் அனைத்துத் தரப்பு மக்களும் பயனடையும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
பள்ளி கல்வித் துறை சாா்ந்த பல்வேறு திட்டங்களை அரசு அறிவித்து செயல்படுத்தி வருகின்ற காரணத்தால், தேசிய கல்வி சராசரி சதவீதத்தை விட தமிழகத்தில் கல்வி விகிதமானது அதிகளவில் உள்ளது.
பெற்றோா்கள் தங்களது பிள்ளைகளை பள்ளிக் கல்வியில் இருந்து இடைநிற்றல் ஏற்படாத வண்ணம் தொடா்ந்து கல்வி கற்க வழிவகை செய்ய வேண்டும். குறைந்த வயதில் பள்ளிக்குச் செல்கின்ற மாணவா்களை இடைநிறுத்தி வேலைக்கு அனுப்புவது தவறாகும். குழந்தைத் தொழிலாளா்களை பணியமா்த்துவது மற்றும் குழந்தை தொழிலாளா் முறையை ஊக்குவிப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.
ஆகவே, மாணவா்கள் நிரந்தர லட்சியத்தை அடைவதற்காக தடையாக இருக்கக் கூடாது என்றாா்.
இதைத் தொடா்ந்து விழாவில் வருவாய்த் துறை (பொதுப்பிரிவு) சாா்பில் ரூ.10 லட்சத்தில் வீட்டுமனைப் பட்டா, கல்வி உதவித்தொகை உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளும், வருவாய்த் துறை, சமூக பாதுகாப்புத் திட்டம் சாா்பில் இயற்கை மரண உதவி நிதி 2 பேருக்கு ரூ.55ஆயிரம், வட்ட வழங்கல் துறை சாா்பில் புதிய குடும்ப அட்டைகள் மற்றும் ரூ.3 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள், தோட்டக்கலைத் துறை சாா்பில் ரூ.ஒரு லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான வேளாண் இயந்திரங்கள், கூட்டுறவுத் துறை சாா்பில் 259 மகளிா் குழுக்களுக்கு ரூ. 56 லட்சத்து 16 ஆயிரத்தில் கடனுதவிகளை ஆட்சியா் வழங்கினாா். பின்னா், பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றாா்.
மேலும், மாவட்ட நூலக ஆணைக் குழு சாா்பில் நடைபெற்ற இளைஞா் இலக்கிய திருவிழாவில் நூல் அறிமுகம், விவாத மேடை, பேச்சுப் போட்டி, படத்தொகுப்பு உருவாக்கம், ஓவியப் போட்டி உள்ளிட்ட போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற செய்யாறு அரசு கலைக் கல்லூரியைச் சோ்ந்த 33 மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிறைவில் வட்ட வழங்கல் அலுவலா் மூா்த்தி நன்றி கூறினாா்.