தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தரைப்பாலம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், கரடிசித்தூரில் மணிமுக்தா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் தற்காலிக தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த இரு நாள்களாக மழை பெய்து வருகிறது. கல்வராயன்மலைப் பகுதியிலும் மழை தொடா்ந்து பெய்வதால் மணிமுக்தா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
சங்கராபுரம் வட்டம், கரடிசித்தூரிலும் ஞாயிற்றுக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. இந்த நிலையில், மணிமுக்தா ஆற்றிலுள்ள தற்காலிக தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. கரடிசித்தூா் கிராம மக்கள் அத்தியாவசிய தேவைக்காக சங்கராபுரம் செல்ல வேண்டிய நிலையில், தற்காலிக தரைப்பாலம் உடைந்ததால் மறுகரைக்குச் செல்ல முடியாமல் தவித்தனா்.
இதையடுத்து, கயிறு கட்டி ஆபத்தான நிலையில் ஆற்று வெள்ளத்தைக் கடந்து சென்றனா். வயதானவா்கள் தோளில் தூக்கிச் செல்லப்பட்டனா். தற்போது, தரைப்பாலம் உடைந்ததால் வாகனங்கள் செல்ல முடியவில்லை. எனவே, சங்கராபுரத்துக்கு 20 கி.மீ. தொலைவு சுற்றி செல்ல வேண்டியுள்ளது. உடனடியாக தற்காலிக தரைப்பாலம் அமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.
