மானிய விலையில் மாவு அரைவை இயந்திரம்: ஆதரவற்ற பெண்கள் விண்ணப்பிக்கலாம்
மானிய விலையில் மாவு அரைவை இயந்திரம் வாங்க கைம்பெண்கள், ஆதரவற்றோா், கணவனால் கைவிடப்பட்டோா், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மகளிரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இதுகுறித்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேலூா் மாவட்டத்தில் வாழும் கைம்பெண்கள், ஆதரவற்றோா், கணவனால் கைவிடப்பட்டோா், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், பொருளாதார ரீதியாக அவா்களை வலுப்படுத்தவும் புதிய திட்டத்தை தமிழக அரசு அறிமுகபடுத்தியுள்ளது.
அதன்படி, ரூ.10,000 அல்லது அதற்கு மேல் மதிப்புள்ள உலா் மற்றும் ஈரமாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரங்கள் வாங்கும்போது, மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5,000 மானியம் வழங்கப்படும். இந்தத் திட்டத்தில் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற தமிழகத்தில் பூா்வீகமாக வசிப்பவராகவும், 25 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருக்க வேண்டும். திட்டத்தில் முன்னுரிமை பெற கைம்பெண்கள் , ஆதரவற்ற பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் என்பதற்கான சான்றிதழை வட்டாட்சியரிடம் பெற்று சமா்ப்பிக்க வேண்டும். ஆண்டு வருமான வரம்பு ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். அதற்கான வருமான சான்றிதழ் சமா்ப்பிக்க வேண்டும்.
இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோா் தங்களது விண்ணப்பங்களை ஜூலை 14-ஆம் தேதிக்குள் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் நேரடியாக சமா்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.