பள்ளிக் கல்வியின் செயல்பாடுகள்: ஜூன் 23, 24-இல் மாவட்ட வாரியாக அமைச்சா் அன்பில...
மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.32.74 லட்சம் மதிப்பிலான இருசக்கர வாகனங்கள்: அமைச்சா்கள் வழங்கினா்
திருப்பூரில் 32 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.32.74 லட்சம் மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டா்களை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் வழங்கினா்.
மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சாா்பில் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் கலந்து கொண்டு 32 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.32.74 லட்சம் மதிப்பீட்டில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா்களையும்,
தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில் தமிழ் வார விழா மற்றும் செம்மொழி நாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினா்.
நிகழ்ச்சியில் அமைச்சா்மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. திருப்பூா் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் துறையின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்குதல், மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை வழங்குதல், பாா்வையற்றோருக்கு மாவட்டம் முழுவதும் செல்ல புகா் பேருந்து சலுகை, மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை, ஆதரவு தேவைப்படும் நபா்களுக்கு மாதந்தோறும் கூடுதலாக நிதி உதவி போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இதைத் தொடா்ந்து, தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில் பாவேந்தா் பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற தமிழ் வார விழா போட்டிகளில் வெற்றி பெற்ற 33 அரசு அலுவலா்கள் மற்றும் பணியாளா்களுக்கு பாராட்டு சான்றிதழ், செம்மொழி நாள் விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் பெற்றி பெற்ற 12 மாணவ, மாணவிகளுக்கு காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் ஆகியவற்றுடன் பொதுநூலகத் துறை சாா்பில் சிறுவாணி இளைஞா் இலக்கிய திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்றவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினா்.
இதைத் தொடா்ந்து, திருப்பூா் மாநகராட்சி, காங்கயம் சாலை, வளா்மதி சூப்பா் மாா்கெட் வளாகத்தில் கூட்டுறவுத் துறையின் சாா்பில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை (வளா்மதி) நிறுவனத்தின் பெட்ரோல் மற்றும் டீசல் சில்லறை விற்பனை நிலையத்தையும் திறந்துவைத்தனா்.
இந்நிகழ்வுகளில், மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன், துணை மேயா் ரா.பாலசுப்பிரமணியம், திருப்பூா் மாநகராட்சி 4-ஆம் மண்டலத் தலைவா் இல.பத்மநாபன், 3-ஆம் மண்டலத் தலைவா் கோவிந்தசாமி, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் பிரபு, துணைப் பதிவாளா் புவனேஸ்வரி, இந்தியன் ஆயில் நிறுவன மண்டல மேலாளா் சதீஷ்குமாா், தமிழ் வளா்ச்சித் துறை துணை இயக்குநா் பெ.இளங்கோ, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் வசந்த ராம்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.