மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டி தொடக்கம்
நாகையில் மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
2025-2026-ஆம் ஆண்டுக்கான முதல்வா் கோப்பை, மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியா்களுக்கு செவ்வாய்க்கிழமை (ஆக.26) தொடங்கி செப்.11-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் பங்கேற்று போட்டிகளைத் தொடங்கி வைத்தாா். தமிழ்நாடு மீன்வளா்ச்சி கழகத் தலைவா் என். கௌதமன், நாகை சட்டப்பேரவை உறுப்பினா் ஜெ. முகம்மது ஷா நவாஸ், நகா்மன்றத் தலைவா் ரா. மாரிமுத்து, துணைத் தலைவா் செந்தில்குமாா், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் சி.மு. குமரன், மாவட்ட உடற்கல்வி ஆய்வா் க.ந. கண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
போட்டிகள் நாகை மாவட்ட விளையாட்டு மைதானம், நாகை அரசினா் தொழிற்பயிற்சி விளையாட்டு மைதானம், வலிவலம் தேசிகா் பாலிடெக்னிக் கல்லூரி விளையாட்டு மைதானங்களில் நடைபெறுகிறது.
போட்டிகளில் வெற்றி பெறுபவா்களுக்கு முதல் பரிசு ரூ. 3,000, 2-ஆம் பரிசு ரூ. 2,000, 3-ஆம் பரிசு ஆயிரம் ரூபாய் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. மாவட்ட போட்டிகளில் வெற்றி பெறுவோா் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க அரசு செலவில் அழைத்துச் செல்லப்படுவா்.