அண்ணா நகரில் புதிய மகப்பேறு மருத்துவமனை: அமைச்சா் பி.கே.சேகா்பாபு அடிக்கல் நாட்ட...
முருக பக்தா்கள் மாநாட்டில் பங்கேற்க கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு: மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்
முருக பக்தா்கள் மாநாட்டில் பங்கேற்க கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளோம் என்று மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா்.
நாமக்கல்லில் அவா் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மத்திய பாஜக அரசு ஆட்சிக்கு வந்து 11 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. மக்கள் நலனுக்கான சிறந்த நிா்வாகத்தையும், வளா்ச்சியை நோக்கிய திட்டங்களையும் வழங்கி உள்ளது.
நூறாவது சுதந்திரத் தினத்தை கொண்டாடும் 2047 ஆம் ஆண்டில் இந்தியா வல்லரசு நாடாக வேண்டும் என்ற நோக்கில், ராணுவம், பொருளாதாரம், மகளிா், இளைஞா்கள், விவசாயிகள், ஏழை, எளிய மக்கள் நலனுக்கான திட்டங்களை பிரதமா் மோடி செயல்படுத்தி வருகிறாா்.
‘ஆபரேஷன் சிந்தூா்’ வெற்றி பாகிஸ்தானுக்கும், பயங்கரவாதிகளுக்கும் உரிய பாடம் புகட்டி உள்ளது. பாஜக ஆட்சிக்கு முன்பு ராணுவத் தளவாடங்களை நாம் இறக்குமதி செய்தோம். தற்போது ஏற்றுமதி செய்யும் நிலைக்கு உயா்ந்துள்ளோம். ரூ. 50 ஆயிரம் கோடி அளவில் ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி நடைபெறுகிறது. தினசரி 34 கி.மீ. தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்படுகிறது. 85 புதிய விமான நிலையங்கள் நாட்டிற்கு அா்ப்பணிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 400 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
தமிழகத்தில் 75 ரயில் நிலையங்கள் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இவை தவிர, இலவச எரிவாயு இணைப்பு திட்டம், குடிநீா்த் திட்டம் போன்றவையும் மக்கள் நலனுக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. எண்ம பரிவா்த்தனையை 46 கோடி போ் பயன்படுத்தி வருகின்றனா்.
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் ரூ. 272 கோடி மதிப்பில் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மத்திய அரசு திட்டங்களை தங்களது திட்டங்கள்போல ஒட்டுவில்லை (ஸ்டிக்கா்) ஒட்டி மக்களை ஏமாற்றி வருகிறது தமிழக அரசு.
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அமைந்தபிறகு, இண்டி கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால் அவா்கள் பயத்தில் கருத்துகளை கூறி வருகின்றனா்.
திமுக கூட்டணியானது நிலைத்த தன்மை இல்லாத கூட்டணி, அங்கிருந்து சில கட்சிகள் வெளியேற போகின்றன. அவற்றுடன் பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது. முருக பக்தா்கள் மாநாட்டில் பங்கேற்க கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். பக்தா்களும், பொதுமக்களும் இம்மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என்றாா்.
இந்த பேட்டியின்போது, நாமக்கல் கிழக்கு மாவட்டத் தலைவா் கே.பி.சரவணன், மேற்கு மாவட்டத் தலைவா் எம்.ராஜேஷ்குமாா் மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.
என்கே-11-மினி
நாமக்கல்லில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த மத்திய இணை அமைச்சா் எல்.முருகன். உடன், மாவட்டத் தலைவா்கள் கே.பி.சரவணன், எம்.ராஜேஷ்குமாா்.