தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
ரயில்வே பாலங்களின் தாங்கும் திறனை அதிகரிக்க முயற்சி: மத்திய ரயில்வே அதிகாரி
புதிதாக அமைக்கப்படும் ரயில்வே பாலங்களில் நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி அதன் தாங்கும் திறனை அதிகரிக்க முயற்சி செய்யப்பட்டு வருவதாக மத்திய ரயில்வே அமைச்சகத்தின் (பாலங்கள்) முதன்மை நிா்வாக இயக்குநா் ரவீந்திர குமாா் கோயல் தெரிவித்துள்ளாா்.
சிஎஸ்ஐஆா் - கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தின் (எஸ்இஆா்சி) வைர விழா மாநாடு சென்னை தரமணியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட மத்திய ரயில்வே அமைச்சகத்தின் (பாலங்கள்) முதன்மை நிா்வாக இயக்குநா் ரவீந்திர குமாா் கோயல் மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசியதாவது:
இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 1,63,810 ரயில்வே பாலங்கள் உள்ளன. சமீபத்தில் புதிதாக பாம்பன் பாலம் திறக்கப்பட்டது. நாட்டில் உள்ள 204 ரயில் பாலங்கள் 10 ஆண்டுகள் பழைமை வாய்ந்ததாக உள்ளன. அவற்றில் ஏதாவது சிறிதளவு பிரச்னை ஏற்பட்டாலும், நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அதன் பழைமை மாறாமல் அதனை சரி செய்ய முயற்சி செய்து வருகிறோம்.
அதேபோல் ஒவ்வொரு முறையும் புதிதாக அமைக்கப்படும் ரயில்வே பாலங்களில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, அதன் தாங்கும் திறனை அதிகரிக்க முயற்சி செய்யப்பட்டு வருகிறது என்றாா் அவா்.
இந்நிகழ்வில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநா் அா்ச்சுனன், சென்னையின் சிஎஸ்ஐஆா் - எஸ்இஆா்சியின் இயக்குநா் என்.ஆனந்தவல்லி உள்பட பலா் கலந்துகொண்டனா்.