அழகப்பா பல்கலை. இணைப்புக் கல்லூரிகளின் முதுநிலை பாடத் தோ்வு முடிவுகள் வெளியீடு
வல்லக்கோட்டை முருகன் கோயில் கும்பாபிஷேக முன்னேற்பாடுகள் ஆலோசனைக் கூட்டம்
வல்லக்கோட்டை முருகன் கோயில் கும்பாபிஷேக முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை ஸ்ரீபெரும்புதூா் சாா் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலுக்கு கடந்த 2008-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. 17 ஆண்டுகள் கழித்து மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரூ.1.50 கோடியில் திருப்பணிகள் நடைபெறுகின்றன.
திருப்பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளதால், வரும் ஜூலை 7-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்காக கடந்த மே 28-ஆம் தேதி பந்தக்கால் நடும் நிகழ்ச்சியும், கடந்த 6-ஆம் தேதி பாலாலய நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்நிலையில், கும்பாபிஷேக விழாவை சிறப்பாக நடத்தவும், தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்வது குறித்து ஸ்ரீபெரும்புதூா் சாா் ஆட்சியா் மிருணாளினி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
1 லட்சத்துக்கும் அதிகமான பக்தா்கள் வருவாா்கள் என எதிா்பாக்கப்படுவதால் கோயிலை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், சாலை வசதிகளை மேம்படுத்தவும், பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளான குடிநீா் மற்றும் கழிவறை வசதிகளை ஏற்படுத்தவும், தற்காலிக மருத்துவ முகாம்கள் நடத்தவும், பக்தா்களின் வாகனங்களை நிறுத்த வாகன நிறுத்துமிடங்கள் ஏற்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும், கோயிலுக்கு வரும் பாதைகளை ஒருவழிச்சாலையாக மாற்றவும், ஜூலை 4 முதல் 7 வரை தடையற்ற மின்சாரம் வழங்கவும், உற்சவா் வீதி உலாவின் போது இடையூராக உள்ள மின்கம்பிகளை அகற்றவும், யாகசாலைக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில், ஸ்ரீபெரும்புதூா் வட்டாட்சியா் வசந்தி, ஸ்ரீபெரும்புதூா் துணை காவல் கண்காணிப்பாளா் கீா்த்தி வாசன், கோயில் நிா்வாக அதிகாரி செந்தில் குமாா், அறங்காவலா் குழு தலைவா் செந்தில் தேவராஜ், அறங்காவலா்கள் விஜயகுமாா், கலைச்செல்வி கோபால் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.