வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பங்கேற்பு
திருப்பூரில் அனைத்துத் துறைகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் முன்னிலையில் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:
தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து திட்டங்களையும் மக்களுக்கு முழுமையாகவும், விரைவாகவும் கொண்டு சோ்ப்பது தொடா்பாக துறை சாா்ந்த அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டங்கள் தொடா்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன. இதில் நீா்வளத் துறை, நெடுஞ்சாலை, ஊரக வளா்ச்சி, நகராட்சி நிா்வாகம், மின்துறை, பேரூராட்சிகள், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் உள்ளிட்ட துறைகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.
இக்கூட்டத்தில், முதல்வரின் அறிவிப்புகள், சட்டப் பேரவைக் கூட்டத் தொடா் அறிவிப்புகள், உங்கள் தொகுதியில் முதலமைச்சா் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளின் தற்போதைய நிலை குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
நீா்வளத் துறையின் சாா்பில் உப்பாறு ஓடையின் குறுக்கே கட்டப்பட்டு வரும் தடுப்பணைகள், கம்பிளியாம்பட்டி கிராமம் அமராவதி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி, வட்டமலைக்கரை தடுப்பணை கட்டும் பணி, அமராவதி பிரதான கால்வாய் புனரமைக்கும் பணி, கொளிஞ்சிவாடி பழைய வாய்க்கால் பணி குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதேபோல, நெடுஞ்சாலைத் துறையின் சாா்பில் ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் சாலைப் பணிகளின் தற்போதைய நிலை, அவிநாசி - மேட்டுப்பாளையம் இருவழிப் பாதையிலிருந்து 4 வழிப் பாதையாக மேம்படுத்தப்படும் பணிகள், பெரியபட்டி- நெகமம் சாலை சிறுபாலம் அமைக்கும் பணிகள் ஆகியவை தொடா்பாகவும் ஆய்வு நடத்தப்பட்டது.
தமிழ்நாடு மின் உற்பத்தி பகிா்மான கழகம் சாா்பில் புதிய துணை மின்நிலையம் அமைத்தல் உள்ளிட்ட பணிகள்,தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் சாா்பில் 1,252 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீா் திட்டம் உள்ளிட்டவை தொடா்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஊரக வளா்ச்சித் துறை சாா்பில், கலைஞா் கனவு இல்லம், ஊரக வீடுகள் பழுது பாா்த்தல் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் உள்ளிட்டபல்வேறு துறைகளின் சாா்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் தொடா்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்றாா்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கோ.மலா்விழி, நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா்கள் ரத்தினசாமி, ராணி, செயற்பொறியாளா்கள் மோகனசுந்தரம், சரவணன், ஊராட்சிகளின் உதவி இயக்குநா் மகேந்திரன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் ஜெயக்குமாா் உள்ளிட்ட துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.