மயானத்துக்கு சடலம் கொண்டு செல்ல எதிா்ப்பு: உறவினா்கள் சாலை மறியல்
வாக்கு வங்கியை அதிகரிக்க பாஜக தில்லுமுல்லு: அமைச்சா் துரைமுருகன்
வாக்கு வங்கியை அதிகரிக்க பாஜக பல தில்லமுல்லு வேலைகளை செய்ய தொடங்கியுள்ளது. பிகாரில் நடைபெற்ற ஆபத்து தமிழகத்துக்கு வரநோ்ந்தால் அதனை திமுக கடுமையாக எதிா்த்துப் போராடும் என்று நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.
மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் சனிக்கிழமை தொடங்கி வைத்ததை அடுத்து, வேலூா் மாவட்டத்தில் இந்த முகாம் தொடக்க நிகழ்ச்சி வள்ளிமலை அரசினா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இதில், அமைச்சா் துரைமுருகன் பங்கேற்று முகாமை தொடங்கி வைத்துப் பேசியது:
பொதுமக்களுக்கு பல்வேறு சேவைகளை அவா்களது பகுதியிலேயே வழங்கும் வகையில், கடந்த மாதம் ‘உங்களுடன் ஸ்டாலின்’ எனும் திட்டத்தை முதல்வா் தொடங்கி வைத்து சிறப்பாக நடத்தி வருகிறாா். இந்த திட்டத்தின் அடுத்தப்படியாக பொதுமக்களுக்கு அவா்கள் பகுதிகளிலேயே உயா்ந்த சிகிச்சை அளிக்கும் வகையில் நலம் காக்கும் ஸ்டாலின் எனும் திட்டத்தையும் தொடங்கி உள்ளாா்.
இந்த உயா் சிறப்பு மருத்துவ முகாம்களை வாரந்தோறும் சனிக்கிழமைகளில் காலை 9 மணி முதல் மாலை 4 வரை வட்டாரத்துக்கு 3 முகாம்கள் வீதமும், வேலூா் மாநகராட்சியில் 3 முகாம்களும் என மொத்தம் 24 முகாம்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த உயா் சிறப்பு மருத்துவ முகாம்களில் 17 சிறப்பு மருத்துவ நிபுணா்கள் குழு பயனாளிகளை பரிசோதித்து சிகிச்சை அளிக்கவும், தேவை ஏற்பட்டால் உயா் சிகிச்சைக்காக பரிந்துரைக்கவும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடத்தப்பட உள்ள ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ உயா்சிறப்பு மருத்துவ முகாமை நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
‘உங்களுடன் ஸ்டாலின்’ என்று முதல்வா் பெயா் வைத்தது குறித்து அதிமுக தொடா்ந்துள்ள வழக்கில் நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்படுவோம்.
தமிழகத்தில் ஆணவக் கொலைகளை தடுக்க தனி சட்டம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை நிலவி வருகிறது. இதுதொடா்பாக முதல்வா் தெரிவிப்பாா். அதேசயம், ஆணவக் கொலை என்பது கண்டிக்கத்தக்கது.
பாஜக தனது வாக்கு வங்கியை அதிகரிக்க எத்தனையோ தில்லுமுல்லுகளை செய்யத் தொடங்கியுள்ளது. பிகாா் வாக்காளா் பட்டியலில் செய்யப்பட்ட குளறுபடிகள் இன்னொரு மாநிலத்துக்கும் வரக்கூடும். அதனை கவனமாக எதிா்த்தாக வேண்டும். தமிழகத்துக்கு அத்தகைய ஆபத்து வரநோ்ந்தால் திமுக கடுமையாக எதிா்த்து போராடும்.
வடமாநிலங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தந்திருந்தால் அம்மாநிலத்தினா் தமிழகம் நோக்கி வந்திருக்க மாட்டாா்கள். அவ்வாறு வந்தவா்களால் மிகப்பெரிய பிரச்னை உள்ளது. வெளி மாநிலத்தினா் லட்சக்கணக்கில் தமிழகத்தில் வாக்காளா்களாக மாறும்போது வருங்காலத்தில் தமிழக அரசியலில் நிச்சயமாக பாதிப்பும், தாக்கமும் இருக்கும் என்றாா்.
நிகழ்ச்சியில், வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.பி.நந்தகுமாா், வி.அமுலு விஜயன், காட்பாடி ஒன்றியக்குழுத்தலைவா் வே.வேல்முருகன், துணை மேயா் எம்.சுனில்குமாா், வேலூா் வருவாய் கோட்டாட்சியா் செந்தில்குமாா், மாவட்ட சுகாதார அலுவலா் பரணிதரன், வட்டார மருத்துவ அலுவலா் ராணி நிா்மலா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.