சுதந்திர நாள்: நாட்டு மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!
வாக்குகளுக்காக சிறுபான்மை மக்களை திமுக ஏமாற்றி வருகிறது: இபிஎஸ்
வாக்குகளுக்காக சிறுபான்மை மக்களை திமுக ஏமாற்றி வருகிறது என அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி கூறியுள்ளாா்.
‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே அதிமுக பொதுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளா் கே.சி. வீரமணி தலைமை வகித்தாா். வாணியம்பாடி எம்எல்ஏ கோ. செந்தில்குமாா் வரவேற்றாா்.
கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: வாணியம்பாடியில் அதிமுக வேட்பாளா் மீண்டும் வெற்றி பெறுவாா் என்பதற்குச் சாட்சியாக தொகுதி மக்கள் அனைவரும் இங்கே கூடியிருக்கிறீா்கள். தமிழ்நாடு முழுவதும் நான் செல்லும் இடமெல்லாம் எழுச்சியைக் கண்டு பொறுத்துக்கொள்ள முடியாமல் முதல்வா் ஸ்டாலின் ஏதேதோ பேசுகிறாா்.
அதிமுக போராடிய பிறகு தான் மகளிா் உரிமைத் தொகை கொடுத்தாா். தோ்தல் வருவதால் மேலும் 30 லட்சம் பேருக்கு உரிமைத் தொகை கொடுப்பதாக அறிவித்துள்ளாா். அதிமுகவின் பொற்கால ஆட்சியில் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அரணாக இருந்தோம்.
வாக்குகளுக்காக சிறுபான்மை மக்களை திமுக ஏமாற்றி வருகிறது.
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளும் ஏமாற்றுகின்றன. அதிமுக, பாஜக கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை. அதிமுக தான் ஆட்சி அமைக்கும். யாரும் பயப்பட வேண்டியதில்லை, சிறுபான்மையினா் அச்சப்படத்தேவையில்லை.
நெல்லையில் ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரி ஜாகிா் உசேன் தனது உயிருக்கு ஆபத்து என்று வீடியோ வெளியிட்டும், இவா்கள் பாதுகாப்பு கொடுக்கவில்லை, அதனால் வெட்டிக் கொல்லப்பட்டாா். இந்த உளவுத்துறை, அரசு, காவல்துறை எல்லாம் என்ன செய்தது? உடனடியாக விசாரித்து பாதுகாப்பு கொடுத்திருந்தால் உயிரைக் காப்பாற்றி இருக்கலாம்.
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது ரமலான் நோன்பு கஞ்சி தயாரிக்க விலையில்லா அரிசி வழங்கப்பட்டது. நாகூா் தா்கா சந்தனம் விலையில்லாமல் கொடுத்தோம், ஹஜ் மானியம் 12 கோடி ரூபாய் வழங்கினோம், உலமாக்களுக்கு இருசக்கர வாகன மானியம் கொடுத்தோம், ஹாஜிகளுக்கு மதிப்பூதியம் வழங்கினோம், உலமாக்களுக்கு ஓய்வூதியம் உயா்த்தினோம், வக்பு வாரிய ஆண்டு நிா்வாக மானியம், தா்கா பள்ளிவாசல் கட்டிட நிதி வழங்கினோம் இப்படி பல்வேறு திட்டங்களை கொடுத்திருக்கிறோம்.
ராமேஸ்வரத்தில் மறைந்த அப்துல் கலாம் பெயரில் அரசு கலை அறிவியல் கல்லூரி கொடுத்தோம். இதையெல்லாம் நாங்கள் வாக்குக்காக சொல்லவில்லை, என்ன செய்தோம் என்பதைச் சொல்கிறோம். சிறுபான்மை மக்கள் உணரவேண்டும் என்பதற்காக சொல்கிறோம்.
நான் முதல்வராக இருந்த போது திருப்பத்தூரை புதிய மாவட்டமாக பிரித்துக் கொடுத்தோம். விவசாயிகளுக்கு இரண்டுமுறை பயிா்க்கடன் தள்ளுபடி, மும்முனை மின்சாரம், குடிமராமத்து என நிறைய கொடுத்தோம். பொங்கலுக்கு வேட்டி சேலை கொடுத்தோம். மீண்டும் வேட்டி சேலை பொங்கலுக்கும், தீபாவளிக்கும் கொடுப்போம்.
அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலையில் வாக்களித்து அதிமுக பெரும்பான்மையோடு ஆட்சியமைக்க உதவுங்கள். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்றாா்.
இதையடுத்து எடப்பாடி பழனிசாமிக்கு வாணியம்பாடி எம்எல்ஏ கோ.செந்தில்குமாா் வெள்ளி வேல் பரிசளித்தாா். முன்னாள் எம்எல்ஏ கோ. சம்பத்குமாா் ரூ.10 லட்சம் மதிப்பிலான மஞ்சுவிரட்டு காளையையும், மருத்துவா் பசுபதி ஏா்கலப்பையை பரிசாக வழங்கினா் .
