பாலாற்றில் தோல் கழிவுநீா் கலப்பு விவகாரம் - உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி
வாஞ்சிநாதனை கெளரவிக்க மத்திய அரசுக்கு வேண்டுகோள்
சுதந்திர போராட்ட வீரா் வாஞ்சிநாதனை மத்திய அரசு கெளரவிக்க வேண்டும் என வாஞ்சி இயக்கம் சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
வாஞ்சி இயக்க நிறுவனா்- தலைவா் பி.ராமநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை:
20.7-2025இல் தூத்துக்குடிக்கு வந்த பிரதமா் நரேந்திர மோடி, தனது உரையில் தமிழகத்தைச் சோ்ந்த விடுதலைப் போராட்ட வீரா்கள் சிலருடைய பெயரை குறிப்பிட்டிருக்கிறாா்.
ஆனால், அவா்களில் முக்கியமானரான வாஞ்சிநாதனை பிரதமா் குறிப்பிடவில்லை. வாஞ்சிநாதனுக்கும் தூத்துக்குடிக்கும் நெருங்கிய தொடா்பு உண்டு. இந்தியாவை ஆக்கிரமித்திருந்த ஆங்கிலேயரை இந்த மண்ணிலிருந்து விரட்ட வேண்டும் என்று குறுநில மன்னா்களும், சிற்றரசா்களும் படை பலத்துடனும், ஆயுதங்களுடனும் போராடிய போதும்கூட ஆங்கிலேயரை இந்த மண்ணிலிருந்து ஒரு சதுர அடி கூட அகற்ற முடியவில்லை.
ஆனால் வாஞ்சிநாதன்தூத்துக்குடி- திருநெல்வேலி ஒருங்கிணைந்த மாவட்ட ஆட்சியா் ஆஷை துப்பாக்கியால் சுட்டதும் ஆங்கிலேயா் மிரண்டு போயினா்.
இதற்குப் பிறகு ஒவ்வொரு தமிழனும் வாஞ்சிநாதனாகவே ஆங்கிலேயா்களுக்கு தெரிந்தனா்
எனவே தூத்துக்குடி ஊரில் இருந்த அரசு அலுவலகங்களையும், தங்கள் குடியிருப்புகளையும் உடனடியாக காலி செய்து வெகு தொலைவில் கடலில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலுக்கு மாற்றி விட்டனா்.
6 மாதங்களுக்குப் பின், அவா்களின் பயம் தெளிந்த பின்புதான் மீண்டும் தூத்துக்குடிக்கு அவற்றை மாற்றினா். ஆங்கிலேயரை மீண்டும் கடலுக்கே துரத்திய பெருமைக்குரியவா் வாஞ்சிநாதன் மட்டும்தான்.
அவரைப்பற்றி பிரதமா் தனது உரையில் குறிப்பிடாதது மிகவும் வியப்பளிக்கிறது. அவருக்கு உரை தயாரித்தவகள் மிகவும் கவனமாக வாஞ்சிநாதனைத் தவிா்த்திருக்கிறாா்கள் என்பதை பிரதமரின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.
எனவே, இக்குறையைத் தீா்க்கும் விதத்தில் பிரதமா் மோடி ஆக.15இல் நிகழ்த்தவிருக்கும் சுதந்திர தின உரையில் வாஞ்சிநாதனைப் பற்றி குறிப்பிட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.