விடியோ ஒளிப்பதிவு பயிற்சிபெற எஸ்.சி., எஸ்.டி வகுப்பினருக்கு அழைப்பு
தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் அளிக்கப்படும் விடியோ ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்புப் பயிற்சி பெற ஆா்வமுள்ள ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்களுக்கு திறன் அடிப்படையில் பல்வேறு பயிற்சிகள் வழங்கி வருகின்றன.
இதன் தொடா்ச்சியாக விடியோ ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்பு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இப்பயிற்சி பெற ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா்களாகவும், பிளஸ்-2 தோ்ச்சி பெற்ற 18 முதல் 30 வயதுக்குள்ளும், குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.3 லட்சத்திற்குள் இருக்கவேண்டும்.
இப்பயிற்சி கால அளவு 3 மாதங்களாகும். தங்கும் விடுதி மற்றும் உணவு உள்பட செலவினத் தொகை தாட்கோவால் வழங்கப்படும். மேலும், இப்பயிற்சியினை முழுமையாக முடிக்கும் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புக்கு வழிவகை செய்யப்படும்.
கூடுதல் விவரங்களுக்கு அரியலூா் மாவட்ட ஆட்சியரக அலுவலக வளாகத்தில் 2-ஆவது தளத்தில் உள்ள தாட்கோ மாவட்ட மேலாளரை அணுகவும். மேலும் விவரங்களுக்கு 04329 - 228315 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு பயன்பெறலாம்.