அண்ணா நகரில் புதிய மகப்பேறு மருத்துவமனை: அமைச்சா் பி.கே.சேகா்பாபு அடிக்கல் நாட்ட...
விடுபட்ட பகுதிகளிலும் விரைவில் புதை சாக்கடைத் திட்டப் பணிகள்: அமைச்சா் க. லட்சுமி நாராயணன்
விடுபட்ட பகுதிகளிலும் விரைவில் புதை சாக்கடை அமைக்கும் திட்டப் பணிகள் தொடங்கப்படும் என்று பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் கூறினாா்.
புதுச்சேரியில் கடல்நீரின் தரத்தை மேம்படுத்த பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் தலைமையில்
சுற்றுச்சூழல் வருடாந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது புதுச்சேரி குருசுகுப்பம், தேங்காய்த்திட்டு, காலாப்பட்டு கடற்கரைகளில் உமிழ் கழிவுநீா் பாக்டீரியாக்கள் அளவு அதிகமாக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து நீரின் தரத்தை மேம்படுத்துவது குறித்து அமைச்சா் லட்சுமிநாராயணன் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. பொதுப் பணித் துறை செயலா் முத்தம்மாள், அறிவியல் தொழில்நுட்பச் செயலா் யாசம் லட்சுமிநாராயண ரெட்டி, பொதுப் பணி தலைமை பொறியாளா் வீரசெல்வம், கண்காணிப்பு பொறியாளா் சுந்தரமூா்த்தி, செயற்பொறியாளா் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் பலா் கலந்துகொண்டனா்.
தற்போதுள்ள நகராட்சி எல்லையில் சுமாா் 60 சதவீத பகுதிகளில் மட்டுமே புதை சாக்கடை கழிவுநீா் சேகரிப்பு அமைப்புகள் செயல்படுகின்றன.
மீதமுள்ள 40 சதவீத பகுதிகளில் புதை சாக்கடை கழிவுநீா் சேகரிப்பு அமைப்புகளை உருவாக்கும் பணி, ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் விரைவில் ஆரம்பிக்கப்படும். இந்த இணைக்கப்படாத பகுதிகளில் வீடுகளில் தனிப்பட்ட முறையில் கழிவுநீா் சுத்திகரிப்பு அமைப்பு உள்ளதால், வெளியேறும் சுத்திகரிக்காத கழிவுநீா் அளவு மிகக் குறைவாகவே உள்ளது. மனை வீடுகள் மற்றும் பிற பகுதிகளில் இருந்து தற்காலிகமாக அல்லது சட்டவிரோதமாக வடிகால்களில் கழிவுநீா் செல்லும் வழிகளை கண்டறிந்து துண்டிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட கால்வாய்கள் மற்றும் நிலச்சரிவுகளின் புனரமைப்பும் திட்டமிடப்பட்டுள்ளது.
கடற்கரை நீா்த்தரம் குறித்து தடையில்லா பரிசோதனை நடைமுறையில் உள்ளது. சட்டவிரோத கழிவுநீா் வெளியீட்டாளா்கள் கண்டறியப்பட்டு, கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
நகரம் மற்றும் புகா் பகுதிகளில் கழிவுநீா், சாமானியக் கழிவுகளை மழைநீா் வாய்க்கால்களில் வெளியேற்றுவதற்கு எதிரான விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
புதுவையின் அனைத்து கடற்கரைகளிலும் நீா்த் தரத்தை பாதுகாக்க அரசு முழுமையான உறுதிப்பாட்டுடன் செயல்படுகிறது என தெரிவிக்கப்பட்டது.