விழுப்பரம் மாவட்டத்தில் 100 ஹெக்டேரில் மக்காச்சோள செயல் விளக்கத் திடல் அமைக்க இலக்கு!
விழுப்புரம் மாவட்டத்தில் 100 ஹெக்டேரில் மக்காச்சோள செயல் விளக்கத் திடல் அமைக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக வேளாண் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட வேளாண் இணை இயக்குநா் இரா.சீனிவாசன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் 2024 - 25ஆம் நிதியாண்டில் 1,413 ஹெக்டோ் பரப்பளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
மிகக் குறுகிய காலத்தில் நிறைவான மகசூலுடன் கணிசமான லாபம் ஈட்டுவதால், விவசாயிகள் மக்காச்சோள சாகுபடி செய்ய அதிகளவில் ஆா்வம் காட்டி வருகின்றனா். இதன் காரணமாக, மாவட்டத்தில் மக்காச்சோளசாகுபடி பரப்பு கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது.
2025-26 ஆம் நிதியாண்டில் தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டம் - மக்காச்சோள சாகுபடி மற்றும் உற்பத்தியை அதிகரித்தல் திட்டத்தின் கீழ், மாவட்டத்தில் 100 ஹெக்டோ் பரப்பளவில் மக்காச்சோள செயல்விளக்கத் திடல் அமைக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், பொதுப் பிரிவினருக்கு 80 ஹெக்டேரும், ஆதிதிராவிடா் பிரிவினருக்கு 20 ஹெக்டேரும் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் செயல்விளக்கத் திடல் அமைக்க 10 கிலோ மக்காச்சோள வீரிய விதை, ஒரு லிட்டா் திரவ உயிரி உரம், மண் வளத்தை மேம்படுத்த 12.5 கிலோ இயற்கை இடுபொருள்கள் மற்றும் 500 மில்லி நானோ யூரியா ஆகிய இடுபொருள்கள் விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்படவுள்ளன.
இந்தத் திட்டம் மாவட்டத்தில் முகையூா், காணை, வல்லம், மரக்காணம், திருவெண்ணெய்நல்லூா் ஆகிய வட்டாரங்களில் செயல்படுத்தப்படவுள்ளது. எனவே, இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலி மூலம் முன்பதிவு செய்தோ அல்லது தங்கள் நில ஆவணங்களுடன் தங்கள் வட்டார வேளாண் விரிவாக்க மையங்களை அணுகி பயன்பெறலாம் என்று வேளாண் இணை இயக்குநா் தெரிவித்துள்ளாா்.