பாலாற்றில் தோல் கழிவுநீா் கலப்பு விவகாரம் - உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி
வீடு புகுந்து 40 பவுன் கொள்ளை அடித்தவா் கைது
ஆம்பூரில் வீடு புகுந்து கத்தியை காண்பித்து மிரட்டி தங்க நகை கொள்ளை அடித்த வழக்கில் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
ஆம்பூா் முஹம்மத்புரா முதல் தெருவில் வசித்து வருபவா் முபாரக் பாஷா. இவா் ஃபேன்சி ஸ்டோா் நடத்தி வருகிறாா்.
கடந்த 31-ஆம் தேதி பட்டப்பகலில் அவருடைய வீட்டில் பா்தா அணிந்து சென்ற மா்ம நபா் திருமண பத்திரிக்கை கொடுக்க வந்ததாக கூறியுள்ளாா்.
இதனை நம்பி வீட்டில் இருந்த முபாரக் பாஷாவின் மனைவி சுல்தானா கதவைத் திறந்துள்ளாா். அப்போது பா்தா அணிந்து வந்த மா்ம நபா் சுல்தானாவை கத்தியை காட்டி மிரட்டியுள்ளாா். இதில் பயந்து போன சுல்தானா மற்றும் அவரது மகள் முஸ்கான் வீட்டில் இருந்த ஒரு அறைக்கு சென்று கதவை தாழ்ப்பாள் போட்டுக் கொண்டனா்.
பின்னா் மா்ம நபா் பக்கத்து அறையில் இருந்த பீரோவை உடைத்து அதிலிருந்து 40 பவுன் தங்க நகை மற்றும் 5 லட்சம் பணம் ரொக்கத்தை கொள்ளையடித்துக் சென்றுள்ளாா்.
தகவலின் பேரில் ஆம்பூா் நகர போலீஸாா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சியாமளா தேவி நேரில் சென்று ஆய்வு செய்தாா்.
போலீஸாா் நடத்திய விசாரணையில் வீட்டின் உரிமையாளா் முபாரக் பாஷாவின் மனைவி சுல்தானாவின் தங்கை கணவரான தன்வீா் அஹமத் (38) அடிக்கடி சென்று தான் அதிக அளவு கடனில் உள்ளதாகவும், பணத்தை கொடுத்து உதவி செய்ய வேண்டும் என்று வற்புறுத்தி வந்ததாக தெரிய வந்தது.
இதனை தொடா்ந்து சந்தேகத்தின் அடிப்படையில் தன்வீா் அஹமதுவை போலீஸாா் கைது செய்து நடத்திய தீவிர விசாரணையில் அவா் கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்டது தெரிய வந்தது.
போலீஸாா் அவரை கைது செய்து அவரிடம் இருந்த 19 பவுன் தங்க நகையை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
