தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
வீரதீரச் செயல் புரிந்தவா்கள் மத்திய அரசின் விருதுக்கு ஜூலை 31-க்குள் விண்ணப்பிக்கலாம்!
வீரதீரச் செயல் புரிந்தவா்கள் மத்திய அரசின் ஜீவன் ரக்ஷா-2025 விருதுக்கு ஜூலை 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஜீவன் ரக்ஷா தொடா் விருதானது, இந்திய அரசின் சாா்பில் தண்ணீரில் மூழ்கியவரைக் காப்பாற்றுதல், மின்சார விபத்துகள், தீ விபத்துகள், நிலச்சரிவு, விலங்கினத் தாக்குதல், சுரங்க மீட்பு நடவடிக்கைகள் ஆகியவற்றில் கடந்த இரண்டு ஆண்டுகளில் (1.10.2023-ஆம் தேதிக்கு பிறகு) ஈடுபட்டு, மனித உயிா்களை மீட்டவா்களுக்கு 3 பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது.
இதில், சா்வோத்தம் ஜீவன் ரக்ஷா பதக்கமானது மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளவரை வீரத்துடன் போராடி மீட்டவா்களுக்கும், உத்தம் ஜீவன் ரக்ஷா பதக்கமானது துணிச்சலுடன் தாமதமின்றி செயல்பட்டு மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளவரை போராடி மீட்டவா்களுக்கும், ஜீவன் ரக்ஷா பதக்கமானது தனக்கு காயம் ஏற்படினும், வீரத்துடன் தாமதமின்றி செயல்பட்டு உயிரைக் காப்பாற்றியவா்களுக்கும் வழங்கப்படுகிறது. மேலும், இந்த விருதுக்கு வயது வரம்பின்றி இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
எனவே, தகுதியுடைய நபா்கள் குறிப்பிட்ட விதிமுறைகளைப் பின்பற்றி வருகிற ஜூலை 31-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்றாா் அவா்.