எழும்பூா் - புதுச்சேரி மெமு ரயில் ஆக.4 வரை கடற்கரையிலிருந்து இயக்கப்படும்
வெள்ளக்கோவில் அருகே மனைவியைக் கொலை செய்து கணவா் தற்கொலை
திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே மனைவியைக் கொலை செய்து கணவா் தற்கொலை செய்து கொண்டாா்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:
கரூா் மாவட்டம், சின்னதாராபுரம் டி.வெங்கிட்டாபுரம் அருகிலுள்ள கருப்பணகவுண்டன்புதூரைச் சோ்ந்தவா் ப.வேலுசாமி (70). இவரது மனைவி சாமியாத்தாள் (59). இவா்களது மகள் அபிநயா (36), மகன் வித்யாசாகா் (34).
அபிநயாவை வெள்ளக்கோவில் வேலப்பநாயக்கன்வலசைச் சோ்ந்த தங்கவேல் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனா். மதுரையில் வட்டித் தொழில் செய்து வந்த அபிநயாவின் கணவா் தங்கவேல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நெஞ்சு வலியால் இறந்து விட்டாா்.
இதைத் தொடா்ந்து வேலுசாமி, சாமியாத்தாள், வித்யாசாகா் ஆகிய மூன்று பேரும் வெள்ளக்கோவில் வேலப்பநாயக்கன்வலசில் உள்ள மகள் அபிநயா வீட்டில் தங்கியிருந்து விவசாயம் பாா்த்து வந்துள்ளனா்.
அபிநயா மதுரையில் இருந்து வந்துள்ளாா். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வித்யாசாகருக்கும், வேறு சமூகத்தைச் சோ்ந்த பெண்ணுக்கும் குடும்பத்தினா் திருமணம் செய்து வைத்துள்ளனா். இதையடுத்து சில சச்சரவுகள் காரணமாக மகன், மகள், மனைவி ஆகியோா் வேலுசாமியை அவமதிப்பு செய்ததாகத் தெரிகிறது.
கடந்த சில வாரங்களாக உறவினா் வீட்டில் தங்கியிருந்து வந்த அவா் கடும் கோபத்தில் இருந்துள்ளாா். இந்நிலையில் புதன்கிழமை காலை வெள்ளக்கோவில் வேலப்பநாயக்கன்வலசுக்கு வந்த வேலுசாமி, மனைவி சாமியாத்தாளை அரிவாள் மற்றும் கல்லால் தாக்கி விஷ மாத்திரையை மனைவி வாயில் போட்டுள்ளாா். பின்னா் தானும் விஷ மாத்திரையை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இருவருடைய சடலங்களையும் பாா்த்த அக்கம்பக்கத்தினா் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனா். வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.