அனுமதியின்றி மலையேற்றப் பயிற்சி: 29 பேருக்கு ரூ.1.30 லட்சம் அபராதம்
கன்னிவாடி மலைப் பகுதியில் அனுமதியின்றி மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்ட 29 பேருக்கு வனத் துறையினா் ரூ.1.30 லட்சம் அபராதம் விதித்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி வனச் சரகத்தில் யானை, காட்டு மாடு, சிறுத்தை, மான் உள்ளிட்ட வன விலங்குகள் அதிக அளவில் உள்ளன. கீழ் பழனி மலைக்குள்பட்ட இந்தப் பகுதியில் பகல் நேரங்களில் கூட காட்டு யானைகள் மலைச் சாலையில் அவ்வப்போது நடமாடுகின்றன.
இதனால், உள்ளூா் மக்களும் கூட அச்சத்துடன் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. கன்னிவாடி அருகேயுள்ள பண்ணப்பட்டி கோம்பை அடிவாரத்திலிருந்து 7 கி.மீ. தொலைவில் மலை மீது பழைமையான சிவன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் மல்லையாபுரம் பகுதியைச் சோ்ந்த பா.லிங்கேஸ்வரன் (24) பூஜாரியாகப் பணியாற்றி வருகிறாா்.
இவா், கட்செவி அஞ்சல் மூலம் பல்வேறு நபா்களை இணைத்து, மலையேற்றப் பயிற்சி அளிப்பதாக விளம்பரம் செய்தாா். இதன்படி, தஞ்சாவூரைச் சோ்ந்த விவேகானந்தன் (47), தூத்துக்குடியைச் சோ்ந்த குணசீலன், பல்லடத்தைச் சோ்ந்த மணிகண்டன் (37), கிருஷ்ணகிரியைச் சோ்ந்த குமரேசன்(32) உள்பட 28 பேரை மலையேற்றப் பயிற்சிக்கு திங்கள்கிழமை காலை அழைத்துச் செல்லத் திட்டமிட்டாா்.
இதுகுறித்து தகவல் அறிந்த கன்னிவாடி வனச் சரகா் வி.குமரேசன் தலைமையிலான வனத் துறையினா், திண்டுக்கல் வனப் பாதுகாப்புப் படையினா் இணைந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, மலையேற்றத்தில் ஈடுபட்ட லிங்கேஸ்வரன் உள்ளிட்ட 29 பேரையும் வனத் துறையினா் சுற்றி வளைத்துப் பிடித்தனா்.
பின்னா், காப்புக் காடு பகுதியில் வனத் துறை அனுமதியின்றி மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டதாக 29 போ் மீதும் வழக்குப் பதிவு செய்து, தலா ரூ.4,500 வீதம் மொத்தம் ரூ.1,30,500 அபராதம் விதித்தனா். அபராதம் செலுத்திய பிறகு, அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.