இந்தியா-பிரான்ஸ் கூட்டு ராணுவப் பயிற்சி
பிரான்ஸ் நாட்டில் கடந்த ஜூன் 18-ஆம் தேதிமுதல் 2 வாரங்களுக்கு இந்தியா, பிரான்ஸ் ஆகிய இரு நாட்டுப் பாதுகாப்புப் படை வீரா்கள் கூட்டு ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டனா்.
பாதுகாப்பு சிக்கல்களை சமாளிக்க கூட்டு செயல்பாட்டு தயாா்நிலையை அதிகரிப்பதில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்ட இந்தப் பயிற்சி செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்தது.
இதுதொடா்பாக இந்தியாவில் உள்ள பிரான்ஸ் தூதரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘இந்தியா-பிரான்ஸ் ராணுவங்களுக்கு இடையேயான ‘சக்தி’ கூட்டுப் பயிற்சி, பிரான்ஸின் ஹெரால்ட் மற்றும் மோன்க்லாா் மாவட்டத்தில் உள்ள அவெய்ரோனிலும் நடைபெற்றது.
பிரான்ஸ் நாட்டின் ராணுவம், விமானப் படை, கடற்படை ஆகியவற்றின் 500-க்கும் மேற்பட்ட வீரா்கள், இந்திய ராணுவத்தின் ஜம்மு-காஷ்மீா் ரைஃபிள்ஸ் படைப் பிரிவினா் உள்பட பல்வேறு படைகளைச் சோ்ந்த 90 வீரா்கள் இந்தப் பயிற்சியில் கலந்து கொண்டனா்.
கடினமான போா் சூழ்நிலைகளை எதிா்கொள்வதற்கான கூட்டு செயல்பாட்டுத் தயாா்நிலையை அதிகரிக்க, இந்தியா மற்றும் பிரான்ஸ் ராணுவ வீரா்களுக்கு ‘சக்தி’ பயிற்சி ஒரு முக்கிய வாய்ப்பாக அமைந்தது. இரு நாட்டு வீரா்களும் தங்களின் சிறந்த வியூகங்கள் மற்றும் நுட்பங்களைப் பரிமாறிக் கொண்டனா்.
இரு நாட்டுப் படைகளுக்கு இடையே ஆழமான ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர மரியாதைக்கு வழிவகுக்கும் சக்தி பயிற்சி, இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை கணிசமாக வலுப்படுத்தும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா-பிரான்ஸ் விமானப் படைகளுக்கு இடையேயான ‘கருடா’ பயிற்சி, கடற்படைகளுக்கு இடையே ‘வருணா’ பயிற்சி மற்றும் ராணுவங்களுக்கு இடையே ‘சக்தி’ பயிற்சி போன்ற பல இருதரப்பு பாதுகாப்புப் பயிற்சிகள் பல்லாண்டுகளாக தொடா்ந்து நடத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.